Tamil Nadu Assembly Elections 2026: திமுக கூட்டணியில் தொடர்வது ஏன்..? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்!

MDMK-DMK Alliance: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளார். இந்துத்துவ சக்திகளின் தாக்கத்தைத் தடுக்கவும், திராவிட இயக்கங்களைப் பாதுகாக்கவும் திமுகவுடன் கூட்டணி அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றும், மதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Tamil Nadu Assembly Elections 2026: திமுக கூட்டணியில் தொடர்வது ஏன்..? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்!

வைகோ - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

29 Jun 2025 18:42 PM

சென்னை, ஜூன் 29: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை (2026 Assembly Elections Tamil Nadu) முன்னிட்டு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக, அதிமுக கட்சிகளும் கூட்டணி குறித்த வியூகங்களை அமைத்து வருகிறது. இதில், அதிமுக யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் (BJP) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. அதேநேரத்தில், திமுகவின் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுகவுடன் கூட்டணி தொடர்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “எதற்காக திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று மிக தெளிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். இந்துவா சக்திகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றிவிடக்கூடாது என்பதற்காக, திராவிட இயக்கங்களை பாதுகாப்பதற்காகதான்.

திராவிட முன்னேற்ற கழகத்துடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியுடன் உடன்பட்டு, அதையே பொதுக்குழுவும் ஏற்றுக்கொண்டது. இன்றைக்கும் மதிமுக இதே நிலைப்பாட்டுடன்தான் இருக்கிறது. இதை மறுபரீசிலனை செய்ய அவசியமே இல்லை. அமித் ஷா சொல்வதுபோல் நடக்கப்போவதும் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டில் ஜெயிக்கப்போவதும் இல்லை. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறாது. ஆகவே, இல்லாத ஒன்றிற்கு ஏன் கவலைப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணி தொடரும் – வைகோ

தொடர்ந்து மதிமுக தேர்தல் கூட்டணியில் எத்தனை தொகுதிகளை பெறும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “ தேர்தல் நேரத்தின்போது இரு கட்சிகளும் இணைந்து அதை பற்றி விவாதிப்போம். இப்போது என்ன நடக்கிறது என்று சொல்லமுடியாது. திமுக மீது நாங்கள் எந்த விரக்தியை கொண்டிருக்கவில்லை. நாங்கள் கூட்டணியில் எல்லா கட்டங்களையும் கடந்து, ஒரு தேர்தலையும் புறக்கணித்துள்ளோம். தமிழ்நாட்டில் எந்த கட்சியும் அப்படி செய்தது கிடையாது. அதனால் நாங்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்போம். இருப்பினும், நாங்கள் திமுகவில் கூட்டணியுடன் தொடர்வோம் என்பதில் உறுதிப்பட பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளோம்.

மதிமுக திருச்சி மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு குறையாமல் திரள்வார்கள் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு, நம்பில்லை. நாங்கள் நடத்திய எழுச்சி பேரணியில் திரண்ட கூட்டம்போல், சென்னையில் இதுவரை பேரணியிலும் கூட்டம் கூடியது கிடையாது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6.30 மணி வரை பேரணி தொடர்ந்தது. அந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதுபோல் ஒரு வரலாறு இனிமேல் அமையாது. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் திட்டத்தை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து, நிறைய போராட்டங்களை நடத்தி, பேரணிகள் நடத்தி உண்ணாவிரதம் இருந்து, பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டு நானே சுமார் 7 மணிநேரம் வாதாடி உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை போட்டது.