தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
Death of Tamil Nadu Chief Qazi: தமிழ்நாட்டின் தலைமை காஜியாகப் பணியாற்றிய சலாஹுத்தீன் முகமது அயூப் சாகிப் (84) உடல்நலக் குறைவால் காலமானார். இஸ்லாமிய சமூக சேவைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அவர், கல்விமானாகவும் சிறந்து விளங்கினார். அவரது மறைவு, தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும் என அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மே 25: தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) தலைமை காஜியாகப் பணியாற்றிய சலாஹுத்தீன் முகமது அயூப் சாகிப் (Salahuddin Mohammed Ayub Sahib) (வயது 84) உடல்நலக்குறைவால் 2025 மே 24 நேற்று இரவு 9 மணியளவில் காலமானார். வயோதிகத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது வாழ்நாளை முழுவதும் இஸ்லாமிய சமுதாய சேவைக்கு அர்ப்பணித்திருந்தார். தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவு தன்னை ஆழமாக பாதித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அவரது மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும் என்று EPS தெரிவித்துள்ளார். அவரது தொண்டுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும் என கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி
தலைமை காஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில்,“சலாஹுத்தீன் முஹம்மது அயூப் சாகிப் அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கற்றறிந்த பேராசிரியராகவும், இஸ்லாமிய சமூக சேவைகளுக்காக என்றும் நினைவுகூரப்படும் ஓர் ஆளுமையாகவும் இவர் விளங்கினார்.
நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் எனக்கு பெரிதும் அன்பு செலுத்தினார். அவரை இழந்தது எனக்கு தனிப்பட்ட சோகம். அவரது மறைவு இஸ்லாமிய சமூகத்திற்கே ஒரு பெரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
ஸ்டாலின் இரங்கல்
“தமிழ்நாடு அரசின் தலைமை காஜி திரு. சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார் . pic.twitter.com/oi8SJnOVVp
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 24, 2025
மற்ற அரசியல் தலைவர்களின் இரங்கல்
அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் இரங்கல்: தலைமை காஜி உயர்திரு.சலாஹுத்தீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற இவ்வேளையில், அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அன்னாரது குடும்பத்திற்கும், இஸ்லாமிய சகோதரர் , சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: “தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் சம்ஜூதீன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அறிஞராக சிறப்புமிக்க பயணம்
சலாஹுத்தீன் முகமது அயூப் சாகிப், அரபு மொழியில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்.டி ஆகிய உயர்கல்விப் படிப்புகளை முடித்தவர். மேலும், எகிப்தின் புகழ்பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா எனும் இஸ்லாமிய கல்வியில் உயரிய பட்டத்தையும் பெற்றிருந்தார். அவர், கர்நாடக நவாப்களின் திவானாக பணியாற்றிய முகமது கவுஸ் ஷர்ஃஃப் உல் முல்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தலைமை காஜியின் பொறுப்புகள்
இஸ்லாமிய சமூகத்திற்கு வழிகாட்டும் தலைமை காஜியாக, சமூக மற்றும் குடும்ப விவகாரங்களில் ஷரியா சட்டத்தின்படி ஆலோசனை வழங்குவதும், பண்டிகைகள், மாத பிறைகள் உள்ளிட்ட சமய விவகாரங்களை அறிவிப்பதும் அவரின் முக்கிய பணிகளில் அடங்கும். முஸ்லிம் தனிநபர் சட்டம், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, வக்பு உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் ஆலோசனை பெறக்கூடிய முதன்மை நபராகவும் இருந்தார்.
முக்கிய மரபின் வாரிசு
சலாஹுத்தீன் சாகிப் அவர்களின் கொள்ளு தாத்தா காஜி உபைதுல்லா நக்ஷ்பந்தி, 1880ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் முதல் தலைமை காஜியாக பிரிட்டிஷ் இந்திய அரசால் நியமிக்கப்பட்டவர். இதன் மூலம் அவர் ஒரு முக்கிய இஸ்லாமிய மரபைச் சேர்ந்தவராகவும் விளங்குகிறார்.
இஸ்லாமிய சமுதாயத்துக்கே பேரிழப்பு
இவரது மறைவு, தமிழக இஸ்லாமிய சமூகத்துக்கே அல்லாது, அனைத்து மக்களுக்கும் பேரிழப்பாகும். சமூக நலத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவரின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா இறைவனின் நிழலில் அமைதியடைய எல்லோரும் பிரார்த்திக்கின்றனர்.