காத்திருக்கும் அதிர்ச்சி.. அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும்? – ஜோதிடர்கள் கணிப்பு!
2025-ம் ஆண்டு, பல துயர நிகழ்வுகளால் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஜோதிடர்கள், எதிர்காலம் மகாபாரத காலத்தைப் போன்ற உலகளாவிய போருக்கு வழிவகுக்கும் என கணித்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான் போர் போன்றவை இதற்கு உதாரணமாகவும் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த ஆறு மாதங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான கணிப்புகளையும் கூறியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என கணிக்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகமும் அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கிறது. எல்லாருடைய எண்ணமும் கஷ்டமான சூழலில் இந்த நொடி மாறி விடாதா என்பதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற போது கடந்த ஆண்டைப் போல கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடாது என்பது தான் பிரார்த்தனையாக இருக்கும். அப்படியாகத்தான் 2025 ஆம் ஆண்டு தொடங்கியபோதும் பலரும் வேண்டிக் கொண்டனர். ஆனால் பல வருட இடையூறுகளுக்குப் பிறகு முதல் 3 மாதங்கள் உலகம் அமைதியான காலத்தை கடந்தது. பெரிய அளவிலான எதிர்பாராத சம்பவங்கள் நிகழவில்லை. ஆனால் ஆண்டின் 4வது மாதத்தில் இருந்து ஜூன் மாதம் நடுப்பகுதி வரை மக்கள் என்ன நம்பிக்கையுடன் இந்த ஆண்டை எதிர்பார்த்தனரோ அதனை சிதைக்கும் வகையில் இருந்தது என சொல்லலாம்.
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெற்றது. பின்னர் ஏர் இந்தியா விமான விபத்து, கேதர்நாத் பக்தர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு, தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இஸ்ரேல் – ஈரான் போர் என தொடர்ச்சியான செய்திகளால் ஒட்டுமொத்த மக்களும் சோர்ந்து போயுள்ளனர். இப்படியான நிலையில் ஜோதிடர்கள் இதுவரை நடந்ததை விட மிகப்பெரிய அழிவு காத்திருப்பதாக கணிப்புகளை தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிடர்கள் கணிப்பு
TRS episode என்ற நிகழ்ச்சியில் பேசிய சுவாமி யோகேஷ்வரானந்த கிரி என்பவர் மகாபாரத காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒரு அரிய கிரக சீரமைப்பு உலகளாவிய போர் ஏற்படக் காரணமாகக் கூடும் என்று கணித்துள்ளார். இந்த கிரக செயல்பாடு 2025, மே 30ஆம் தேதி உருவானது. இதனால் நடக்கப்போகும் நிகழ்வுகள் கடந்த கால போர் நிகழ்வுகளை ஒத்திருக்கிறது.இது பெரும்பாலும் இந்தியாவிற்கு சாதகமாகவே அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய நோஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் ஜோதிடரான குஷால் குமார், “மூன்றாம் உலகப் போரின் சாத்தியக்கூறுகள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகியவற்றை கணித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நோஸ்ட்ராடாமஸ், 2025 ஆம் ஆண்டில் நடப்பதாக எதிர்பார்க்கப்படும் தொடர்ச்சியான கொடிய நிகழ்வுகளை பற்றியும் கூறியுள்ளார்.
அதில் தொற்றுநோய், வானியல் மோதல், பொருளாதார சரிவு ஆகியவை பற்றி இடம் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் தான் ஒட்டுமொத்த உலகமே துன்பப்படும் அளவுக்கு மிகப்பெரிய மோதல் எதிர்காலத்தில் வரக்கூடும் என பல ஜோதிடர்கள் கணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும்?
2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாம் இருக்கிறோம். அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும் எந்த கேள்வி பலருக்கும் இருக்கும். அப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் உலகளவில் நிலையற்ற தன்மை கொண்டதாகவே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் போர்கள், விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் கேது கிரகங்கள் மோதல்கள் மற்றும் மறைக்கப்பட்ட ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கு பெயர் பெற்றவையாகும். ஆகவே ஜூன் 7ம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை நிலநடுக்கம், தீ, போர் போன்ற பேரழிவுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும் காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்கள் பொதுமக்களுக்கு அதிக துயரம் ஏற்பட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல நிகழ்வுகள் காரணமாக 2025 ஆம் ஆண்டு சோகம் நிறைந்த மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது. இழப்புகளால் ஏற்படும் வலி உண்மையானது என்றாலும், அதிலிருந்து மீண்டு வருவது நம் கைகளில் தான் உள்ளது என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளன.
(இக்கட்டுரையில் ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)