உங்கள் தோலில் இந்த பிரச்னை இருக்கா? சர்க்கரை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்
Skin Symptoms That Signal Diabetes : உலகில் ஆண்டுக்கு மில்லியன் கணக்கானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரிழிவு நோய் இருப்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இந்த நிலையில் நம் தோலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து நமக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம்.

உலகளவில் நீரிழிவு நோயால் (Diabetic) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இளைஞர்கள், முதியவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் . இது போன்ற சூழ்நிலைகளில், இந்த நோயைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகப்படியாக ஏற்படுவதால் உண்டாகும் பாதிப்பு. இது உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாக அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் அதிக பசி ஆகியவை அடங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள்
நீரிழிவு நோயின் அறிகுறிகளை நமது தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறியலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் தோலில் ஏற்படும். தோலில் பரு போன்ற தடிப்பு ஏற்படுவது அதன் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது தவிர, தோலில் ஏற்படும் காயங்கள் குணமடைய நீண்ட நேரம் எடுத்தால், அதுவும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, நீரிழிவு தொடர்பான பல அறிகுறிகளும் தோலில் வெளிப்படுகின்றன. இந்த அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு, உடனடியாக உங்கள் சர்க்கரை அளவை சரிபார்த்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
குறிப்பாக வறண்ட சருமம், உடலில் கரும்புள்ளிகள் தோன்றுவது, சிவப்பு தடிப்புகள் ஏற்படுவது மற்றும் சருமம் கருமையாகுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. உங்கள் சருமத்தில் இதுபோன்ற மாற்றத்தைக் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளில், இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருப்பது இந்த நோயின் ஆரம்ப அறிகுறியாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனுடன், நீரிழிவு நோயின் தொடக்கத்தில் தோலில் அறிகுறிகளும் தோன்றும். தோலில் பல வகையான மாற்றங்கள் தோன்றும். வறண்ட சருமம், தோலில் பல இடங்களில் சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இதன் அறிகுறிகள். திடீரென உடலில் அரிப்பு ஏற்படுவது கூட இதன் அறிகுறியாகும்.
இதனுடன் கழுத்து மற்றும் பிற பகுதிகளில் உள்ள தோல் கருமையாக மாறும். இது அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கைகள் மற்றும் கால்களிலும் சிறிய கொப்புளங்கள் தோன்றக்கூடும். கால் விரல்களிலும் விரல்களிலும் புண்கள் ஏற்படலாம். நீரிழிவு நோயினால் சருமமும் கடுமையாக சேதமடைகிறது.
தவிர்ப்பது எப்படி?
இத்தகைய அறிகுறிகளை உங்கள் தோலில் கண்டால், உடனடியாக உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ளத் தொடங்குங்கள். வெந்நீரில் குளிக்க வேண்டாம், ஏனெனில் அது சருமத்தை வறட்சியடைய செய்யும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருங்கள். அதே போல பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருங்கள். உங்கள் மருத்துவரை அணுகி, உங்கள் அன்றாட வழக்கத்திலும் உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களைச் செய்யுங்கள்.