ஊட்டி, கொடைக்கானலில் இனி வெயில் கொளுத்தும்.. வெப்ப அலை எச்சரிக்கை கொடுத்த ஆய்வு!
Tamil Nadu Heatwave Update : தமிழ்நாட்டின் மலைவாழிடங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் வரும் ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக வெப்பமயமாதல், நகரமயமாதல், வாகன நெரிசல் போன்ற காரணங்களால் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்

ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கத்திரி வெயில் ( summer ) தொடங்கியதுபோல இப்போதே வெயில்தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கிராமங்களை விடவும் நகரங்கள் வெயிலால் வதங்குகின்றன. வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பலரும் ஊட்டி, (ooty tour) கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு படையெடுப்பதும் தொடங்கிவிட்ட நிலையில், ஆய்வாளர்கள் புது குண்டை போட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வெப்பநிலை குறித்து புள்ளி விவரங்களை பெரியார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் விவரம் தெரிவித்துள்ளனர். இது குறித்து Times of india கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி உலக வெப்பமயமாதல் காரணமாக நாம் குளுகுளு பகுதிகளாக நினைக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களும் எதிர்காலத்தில் வெயிலால் வாடி வதங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆய்வாளர்கள். குளுகுளு மலை பிரதேசங்களிலும் வெப்ப அலை வீசத்தொடங்கி வெப்பம் சில டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வாளர்கள் சொன்னது என்ன?
தமிழ்நாட்டின் குளுகுளு பகுதிகளாக பார்க்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொடைக்கானல் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்காடு ஆகிய இடங்கள் எல்லாம் வரும் ஆண்டுகளில் கொஞ்சம் சூடு அதிகரிக்கும். ஒவ்வொரு நாட்களிலும் சில மணி நேரங்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படும், ஆண்டுகளில் கணக்கிட்டால் சில நாட்கள் வெப்பம் அதிகமாகவே இருக்கும். உலக வெப்பமயமாதல்தான் முக்கிய காரணம் என்றாலும், நகரமயமாதல், அதிக வாகனங்கள் போக்குவரத்தும் இதற்கு ஒருவகையில் காரணமாக அமையும்.
நாளுக்கு நாள் சுற்றுலா பகுதிகள் அதிக கூட்டத்தால் நிரம்பி வழிவதும் அதிக வாகனங்களால் தடைபட்டு நிற்பதும் காண முடிகிறது. வெப்பம் அதிகரிக்க இந்த வாகன நெரிசலே பெரும் பங்காற்றும். குறிப்பாக வார இறுதி நாட்களில் கூட்டத்தைப் போலவே வெப்பமும் அதிகரிக்கும்.
ஊட்டியில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலையாகும். இதே நிலை எதிர்காலத்திலும் நீடிக்கும் , மலைப்பகுதிகள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே வெப்ப அளவு அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்
வட மாநிலங்கள் நிலைமை என்ன?
மலைப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளை காட்டிலும் வெப்பத்தால் அதிகம் பாதிப்புள்ளாகுவது பெரிய நகரங்கள்தான். மரங்களின் அடர்த்தி குறைவு, அதிக வாகனங்கள், தொழிற்சாலைகள் என வெப்பத்தை அதிகரிக்க பல காரணங்கள் நகரங்களில் உள்ளன. தமிழ்நாட்டின் வட மாநிலங்களை பொறுத்தவரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்கள் இயல்பை விட அதிக வெப்பநிலையை காண நேரும். வடக்கில் உள்ள மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா , ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலவும் வெப்ப அலையின் தாக்கம் தமிழக வட மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதால் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்