அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த மழை.. ஒரே நாளில் 29 செ.மீ.. இன்றும் நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்

Weather Report: கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூன் 16,2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் மிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த மழை.. ஒரே நாளில் 29 செ.மீ.. இன்றும் நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்

கோப்பு புகைப்படம்

Published: 

16 Jun 2025 15:51 PM

வானிலை நிலவரம், ஜூன் 16,2025: வடக்கு மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 29 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 18 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் மேல் பவானி பகுதியில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

ஜூன் 18 2025 வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை இருக்கும் என்றும் குறிப்பாக அவலாஞ்சி, பார்சன் வேலி, மேல்பவானி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பா?


சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரையில் ஜூன் 16 2025 தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, பிற்பகல் நேரத்தில் லேசான மழை பதிவாகி வருகிறது. அதே போல் நகரின் ஒரு சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பதிவாகி உள்ளது.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:


இது ஒரு பக்கம் இருக்க தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் எனவும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.