Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஸ்ரீகாந்த்.. கிருஷ்ணா.. கோலிவுட்டை கலங்கடிக்கும் போதைப்பொருள் வழக்கு.. அடுத்து என்ன?

Drug Abduction Case: போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் மேலும் எத்தனை பேருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த்.. கிருஷ்ணா.. கோலிவுட்டை கலங்கடிக்கும் போதைப்பொருள் வழக்கு.. அடுத்து என்ன?
நடிகர்கள் ஸ்ரீகாந்த் - கிருஷ்ணா
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2025 09:49 AM

போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னதாக 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் போதைப் பொருள் பிறருக்கு கொடுத்து விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் அம்பலமானதை தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை:

நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அவரை தொடர்பு கொண்ட பொழுது அவரது தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவை படிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதாவது ஜூன் 25 2025 தேவையான நேற்று முன்தினம் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞருடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

கிடுக்குப்பிடி விசாரணையில் நடிகர் கிருஷ்ணா:

அன்று இரவு முழுவதும் நடிகர் கிருஷ்ணாவிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடிகர் கிருஷ்ணா தனக்கு போதை பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை என உறுதியாக தெரிவித்தார். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் போலீசார் அவரை விடுவிக்க முன் வந்தனர்/ மேலும் விசாரணையின் போது நடிகர் கிருஷ்ணா தனக்கு இரைப்பை பிரச்சனை இருப்பதாகவும் இதய துடிப்பு வேகமாக இருப்பதன் காரணமாக அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் உடல்நிலை கருத்தில் கொண்டு போதைப் பொருள் அவரால் பயன்படுத்த முடியாத எனவும் தெரிவித்திருந்தார்.

போலீசாரிடம் சிக்கியது எப்படி?

ஆனால் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதில் இருக்கக்கூடிய குறுஞ்செய்திகள் மற்றும் கால் ஹிஸ்டரி அனைத்தும் டெலிட் செய்யப்பட்டிருந்தது கவனித்துள்ளனர். பின்னர் சைபர் கிரைம் மூலம் அந்த டேட்டாக்களை மீட்டெடுத்துள்ளனர். இதில் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்கக்கூடிய அனைத்து தொடர்புகளும் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்த டேட்டாக்களை மீட்டெடுக்கும் பொழுது அதில் அவர் ரகசிய குறியீடு வைத்து நண்பர்களுடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரகசிய குறியீடு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நடிகர் கிருஷ்ணா காவல்துறையினரின் கிடக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது அந்த ரகசிய குறியீடு என்பது போதைப் பொருளுக்கான குறியீடு என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2025 ஜூன் 26 ஆம் தேதி மாலை நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையரான கெவின் என்பவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்திற்கு முன் ஆஜர் செய்தனர்.

பின்னர் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா கடந்த சில நாட்களாக போதைப் பொருள் எடுத்துக் கொள்ளாததன் காரணமாக மருத்துவ பரிசோதனையில் போதை பொருள் எடுத்துக் கொண்டதற்கான எந்த குறியீடும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் மேலும் எத்தனை பேருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.