நாமக்கல்லில் இருந்து ஒரு கோடி முட்டைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.. எத்தனை நாட்களில் சென்றடையும்?
Namakkal: நாமக்கல்லில் தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நிலையில், முதல் முறையாக ஒரு கோடி முட்டைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 30 முதல் 40 நாட்களில் அமெரிக்கா சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை ஏற்றுமதி: அமெரிக்க அரசு (US Government) இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு (Egg Import) அனுமதி அளித்ததை தொடர்ந்து முதல் முறையாக ஒரு கோடி முட்டைகள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை என்றாலே அது நாமக்கல் தான். நாமக்கல்லில் தான் தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான கோழி பண்ணைகள் உள்ளன. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த கோழி பண்ணைகளில் ஏழு கோடி வரை முட்டை இன கோழிகள் வளர்க்கப்படுகின்றது. இதன் மூலம் தினசரி ஐந்து கோடி அளவில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தான் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் உலக அளவில் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 1 கோடி முட்டைகள்:
நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்கனவே தினசரி எழுவது லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் தற்போது முதன் முறையாக ஒரு கோடி முட்டை கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முட்டை கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வன் பேசுகையில், அமெரிக்க அரசு முட்டை இறக்குமதிக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஒரு கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனவும் குளிர்சாதன வசதிகள் கொண்ட 21 கண்டெய்னர்களில், தல 4.75 லட்சம் என ஒரு கோடி முட்டைகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கண்டெய்னர்கள் முப்பது முதல் 40 நாட்களுக்குள் அமெரிக்காவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் 90% முட்டைகளை நாமக்கல்லில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுவதாக கூறுகின்றனர். கத்தார், ஓமன், ஆப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு மாதம் 20 கோடி அளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டைக்கு ஸ்திரமான் சந்தை இருந்தால் மட்டுமே முட்டையின் விலை சரியாமல் தடுக்க முடியும் எனவும் இதனால் முட்டை ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தினசரி நாமக்கல்லில் இருக்கக்கூடிய கோழி பண்ணைகளிலிருந்து சுமார் 5 கோடி அளவு முட்டைகள் உற்பத்தியாகிறது எனவும் இதிலிருந்து சத்துணவு திட்டத்திற்கு மட்டும் 60 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல்லில் இருந்து 70 லட்சம் முட்டைகள் தினசரி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் மீதமுள்ள முட்டைகள் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு முதல் முறையாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இனி வழக்கமாக முட்டை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.