சாலையில் பாம்பை காண்பது நல்ல சகுனமா? – சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பலன்கள்!
வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் செல்லும் பாம்பு நல்ல சகுணம், இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் கெட்ட சகுணம் எனக் கூறப்படுகிறது. மரத்தில் ஏறும் பாம்பு நிதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் எனவும், வெள்ளைப் பாம்பு மிகவும் மங்களகரமானது எனவும் நம்பப்படுகிறது.

பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்கள். அந்த அளவுக்கு சாதாரணமாக தொடங்கி கொடிய விஷம் கொண்ட பல பாம்புகள் இந்த பூமியில் வாழ்கின்றது. பாம்பு கடவுளின் மறு உருவமாக பார்க்கப்படுகிறது. சிவனின் கழுத்து தொடங்கி பராசக்திக்கு குடையாக இருப்பது வரை பாம்பானது இந்து மதத்தில் புனிதமான உயிரினமாக பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டுக்கு பாம்பு வந்தாலும் அதனை கொல்லக்கூடாது. வெளியேற்றி விட வேண்டும் என சொல்கிறார்கள். அதேசமயம் என்ன தான் உயிரினங்கள் கடவுளின் உருவமாக இருந்தாலும் அவைகளை வைத்து சகுணங்களும் பார்க்கப்படுகிறது. ஒரு விஷயத்தை தொடங்கும்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணம், மயில் தோகை விரித்து நடனமாடினால் நல்ல சகுணம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்த வகையில் பாம்பை பற்றி உலாவும் தகவல்களை நாம் காணலாம்.
எந்த திசை என்பது முக்கியம்
நீங்கள் செல்லும் வழியில் ஒரு பாம்பானது வலது பக்கமிருந்து இடது பக்கமாக சாலையைக் கடந்தால் நீங்கள் செய்யப்போகும் வேலையில் மிகச்சிறப்பான வெற்றி பெறுவீர்கள் என்பது அர்த்தமாகும். அதேசமயம் நீங்கள் பணத்திற்காக அத்தகைய பயணம் போனால், அதனால் உங்களுக்கு அதிகமான நிதி நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் நீங்கள் சாலையில் செல்லும்போது இடதுபுறத்தில் இருந்து ஒரு பாம்பு சாலையைக் கடப்பதைக் கண்டால் அது ஒரு நல்ல சகுனம் கிடையாது என்பதை உணருங்கள். அந்த விஷயத்தை சிறிது நேரம் தள்ளி வையுங்கள். அந்த நாளில் நீங்கள் என்ன செய்தாலும் திட்டமிட்ட பலனானது கிடைக்காது என சொல்லப்பட்டுள்ளது.
நிதிப் பிரச்சினைகள் தீரும்
ஒருவேளை மரத்தில் ஏறும் பாம்பைக் கண்டால் அது ஒரு சுப அறிகுறியாகவே கருதப்படுகிறது. இதனால் உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப் போகிறது என்று அர்த்தமாகும். மேலும் ஒரு பாம்பு மரத்தில் ஏறுவதைக் கண்டால் நிதிப் பிரச்சினைகள் தீரும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக பாம்புகளில் பல வகை இருந்தாலும் அதில் வெள்ளைப் பாம்புகளைப் பார்ப்பது மிகவும் அரிதான செயலாகும்.
அதேபோல் தான் மரம் விட்டு மரம் தாவும் பச்சை நிற பாம்புகளும். ஆனாலும், நீங்கள் வெள்ளை நிற பாம்புகளைக் கண்டால் அது மிகவும் மங்களகரமான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும் . இதன் மூலம் உங்கள் வேலையில் உள்ள தடைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
சில இடங்களில் இரட்டை தலை பாம்போ அல்லது இரு பாம்புகள் பின்னி பிணைந்ததை கண்டால் அது மிகவும் மங்களகரமானது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இது லட்சுமி தேவியின் வருகையின் அறிகுறி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறந்த பாம்பை கண்டால் அது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)