Colonel Sophia Qureshi: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து.. அமைச்சர் விஜய் ஷா மீது எஃப்ஐஆர் போட உத்தரவு!

MP Minister Vijay Shah Faces FIR: மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததையடுத்து, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி, 4 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஷாவின் கருத்து நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை மே 19 அன்று நடைபெறுகிறது.

Colonel Sophia Qureshi: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து.. அமைச்சர் விஜய் ஷா மீது எஃப்ஐஆர் போட உத்தரவு!

கர்னல் சோபியா குரேஷி - மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா

Published: 

14 May 2025 18:12 PM

மத்திய பிரதேசம், மே 14: மத்திய பிரதேச அமைச்சர் குன்வார் விஜய் ஷா (Madhya Pradesh State Cabinet Minister Kunwar Vijay Shah), கர்னல் சோபியா குரேஷி (Clonel Sophia Qureshi) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை முன் எடுத்துள்ளது. கர்னல் சோபியா குரேஷி குறித்தான கருத்து குறித்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விஜய் ஷா மீது 4 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற திங்கட்கிழமை அதாவது 2025 மே 19ம் தேதி காலை முதல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது..?

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்திற்கு பிறகு மத்திய பிரதேசத்தின் பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது நமது மகள்கலின் நெற்றி குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியை கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பலரும் சமூக வலைதளங்களில் கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் குடிமகள். மேலும், இந்திய இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரை எப்படி நீங்கள் அவர்களது சகோதரி என்று குறிப்பிடலாம் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்குன்வார் விஜய் ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அதுல் ஸ்ரீதர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், தாமான முன்வந்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து, மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு, விஜய் ஷா மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

விஜய் ஷா விளக்கம்:

இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா அளித்த விளக்கத்தில், “என் கனவில் கூட கர்னல் சோபியா சகோதரியை பற்றி நான் தவறாக நினைக்கவில்லை. இராணுவத்திற்கு எந்த அவமானத்தையும் கொடுக்க இப்படி கூறவில்லை. சகோதரி சோபியா சாதி, மதங்களை கடந்து நாட்டிற்கு சேவை செய்து பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். நான் அவரின் சேவைக்காக தலை வணங்குகிறேன். எனது குடும்ப பின்னணியும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டதுதான். பயங்கரவாதிகளால் குங்குமம் அழிக்கப்பட்ட அந்த சகோதரிகளின் வலியை மனதில் கொண்டு நான் பேசினேன். அப்போது உற்சாகத்தில் என் வாயிலிருந்து தவறாக அப்படி வெளிவந்திருந்தால், அதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.