Vikram Sugumaran : பேருந்தில் பயணம் செய்த போது மாரடைப்பு.. மதயானைக் கூட்டம் இயக்குநர் மரணம்.. ஷாக்கில் கோலிவுட்!
Director Vikram Sugumaran Passed Away | தமிழ் திரைப்பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 2, 2025) காலமானார். இவர் தமிழில் மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஜூன் 2 : மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இன்று (ஜூன் 2, 2025) அதிகாலை காலமானார். மதுரையில் இருந்து சென்னைக்கு பேருந்தில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கடந்து வந்த பாதை மற்றும் அவர் இயக்கிய திரைப்படங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் விக்ரம் சுகுமாரன். இவர் புகழ்பெற்ற இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அது தவிர இயக்குனர் வெற்றிமாறனிடமும் ஆடுகளம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் தமிழில் மதயானை கூட்டம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை வைத்து தனது இரண்டாவது திரைப்படமான இராவண கோட்டம் திரைப்படத்தை இயக்கினார்.
திடீர் மாரடைப்பால் காலமான விக்ரம் சுகுமாரன்
ஜூன் 2, இச்செய்தியை நிஜமாகவே என்னால் நம்ப முடியவில்லை. மதுரையில் இருந்து பஸ்சில் சென்னைக்கு வரும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இயக்குனர் மற்றும் நடிகர் விக்ரம் சுகுமாரன் திடீரென்று மரணம் அடைந்தார்.#Madhayaanaikoottam #Raavanakottam Director
Vikram Sugumaran Passed Away pic.twitter.com/1IWR6Qfvfi— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 1, 2025
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜூன் 1, 2025) மதுரைக்கு சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை கூறிவிட்டு பேருந்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.