நடிகர் ஸ்ரீகாந்த் பாவம் என்பதே என்னுடைய கருத்து – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
Seeman: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பதை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்ரீகாந்த் பாவம் என்பதே என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் தொடர்பாக அரசு நினைத்தால் அதனை தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது மிகவும் வருத்தமான ஒன்று என்றும் அவர் பாவம் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பழக்கம் திரையுலகினர் பலருக்கும் இருப்பதாக, இவர் மட்டும் தற்போது மாட்டிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். பார் மோதல் வழக்கில் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மேற்கொண்ட விசாரணையில் பிரசாதின் நண்பர் பிரதீப் மற்றும் ஆப்பிரிக்கா நாடான கானாவில் இருந்து ஜான் என்ற நபரும் கொக்கைன் வழங்கியதாக தெரியவந்தது. இதனால் பிரதீப் மற்றும் ஜானையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது பிரசாத்திற்கு பிரதீப் கொக்கைன் வழங்கியதாகவும் அவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்தும் போதை பொருள் வாங்கியதாக தெரியவந்தது.
நடிகர் ஸ்ரீகாந்தின் பகீர் வாக்குமூலம்:
இதனைத் தொடர்ந்து போதை தடுப்பு பிரிவு போலீசார், நடிகர் ஸ்ரீகாந்த் இடம் விசாரணை மேற்கொண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதை தொடர்ந்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் தான் தவறு செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்து உள்ளதாகவும், அவருக்கு பாக்கி 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய இருந்ததாகவும் தெரிவித்தார். பணம் கேட்ட போதெல்லாம், பிரசாத் தனக்கு கொக்கைன் வழங்கி அந்த பழக்கத்தை ஏற்படுத்தியதாகவும், மூன்று முறை அவர் ஸ்ரீகாந்த்திற்கு கொக்கைன் வழங்கியதாகவும் அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரு கட்டத்தில் நானே கேட்டு வாங்க தொடங்கினேன் என்றும் அதற்கு அடிமையாகி விட்டேன் என்றும் தவறு செய்து விட்டேன் என்றும் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணாவும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா இடமும் விசாரணை மேற்கொள்ள போல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் பாவம் – சீமான்:
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீகாந்த் பாவம் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,” திரையுலகினர் பலரும் இந்த போதைப் பொருளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஸ்ரீகாந்த் மட்டும் தற்போது மாட்டிக்கொண்டு உள்ளார். ஸ்ரீகாந்த் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரிந்தவர். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் மாட்டிக்கொண்டதை அவர் பாவம் என்பதே என் கருத்து” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போதைப் பொருள் என்பது பல இடங்களில் சாதாரணமாக கிடைக்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகள் வரை இந்த போதைப்பொருள் நுழைந்துள்ளது. அரசு நினைத்தால் இதனை தடுக்க முடியும் ஆனால் முதலில் அரசு அதனை நினைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்