விடுமுறை விட்டாச்சு – கொல்லிமலையில் பார்க்க வேண்டிய சுற்றுலாதலங்கள் !
தமிழ் நாட்டில் ஊட்டி கொடைக்கானல் தவிர பிற மலைப்பிரதேசங்களும் இருக்கின்றன. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மக்களால் பெரிதும் இடமாக இருக்கின்றன. கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்து பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கி விட்டது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த ஆண்டு பள்ளித் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தப் படும் என அறிவித்துள்ளது. தேர்வுகள் முன் கூட்டியே நடப்பதால் விடுமுறையும் முன் கூட்டியே தொடங்குகிறது. விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு பயணிப்பது வழக்கம். குறிப்பாக குளுமையான காலநிலை காரணமாக ஊட்டி (Ooty), கொடைக்கானல் (Kodaikanal) போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் பயணிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக விடுமுறை தினங்களில் படையெடுக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்கதையாகியிருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த இ-பாஸ் பெற்ற பிறகே ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் தவிர பார்க்க வேண்டிய தவிர பிற மலைப்பிரதேசங்களும் இருக்கின்றன. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மக்களால் அதிகம் அறியப்படாத இடமாக இருக்கின்றன. கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆகாய கங்கை அருவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. இங்கே செல்வதற்கு சுமார் 1200 படிக்கெட்டுகள் இறங்க வேண்டியிருக்கும். நீண்ட தூரம் படிக்கட்டுகளில் இறங்கி நடக்க வேண்டும் என்பதால் வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது.
அறப்பளீஸ்வரர் கோவில்
கொல்லிமலையின் உச்சியில் மிகவும் புகழ்வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் இது கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ‘ மீன் கோயில் ‘ என்றும் அழைக்கப்படுகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள கடவுள் அறப்பளி மகாதேவன், அறப்பளி உடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.
சித்தர் குகைகள்
இந்த சித்தர் குகைகள் அரிய வகை மூலிகளைல் சூழப்பட்ட பகுதி என்றும் இங்கு இன்னும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் கிடைக்கும் ஜோதி புல் என்ற தாவரம் சுடர் விட்டு எரியக்கூடியது என கூறப்படுகிறது.
முருகன் கோவில்
கொல்லிமலை அடிவாரத்தில் இந்தக் கோவில் அணைந்துள்ளது. மற்ற திருத்தலங்களில் சேவலின் மேல் முருகன் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த திருத்தலத்தில் மட்டும் தனது கையில் சேவலை வைத்திருப்பார். இந்தக் கோவிலில் வேடன் தோற்றத்தில் முருகன் காட்சியளிக்கிறார். இந்த கோவில் வல்வில் ஓரியால் கட்டப்பட்டிருக்கிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்ற பழமை வாய்ந்த கோவில். மேலும் இங்கு சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் ஆலயங்களும் உள்ளன.
மாசி பெரியசாமி கோவில்
கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் மாசி பெரியசாமி ஒரு கோவில் உள்ளது. இது அப்பகுதியின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது.மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல சரியான படிக்கட்டு வசதிகள் இல்லை மாசி மாதத்தில் மிக விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.
வசலூர் படகு இல்லம்
கொல்லிமலையில் உள்ள பிரபலமான சுற்றுதலா தலம் இது. வசலூர் நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட இந்த ஏரியில் படகு சவாரி செய்வது என்பது மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும்.
வல்வில் ஓரி பண்டிகை
கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக வல்வில் ஓரி பண்டிகை அப்பகுதி மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.