மேட் இன் பாரத் – உலகின் சிறந்த தரத்தை உருவாக்க வேண்டும்… கோவையில் வணிக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக தரத்தில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், Made in Bharat என்ற பெயரே தரத்தின் அடையாளமாக மாற வேண்டும் என்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சத்குரு ஜக்கி வாசுதேவ்
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக தரத்தில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், Made in Bharat என்ற பெயரே தரத்தின் அடையாளமாக மாற வேண்டும் என்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மூன்று நாள் தலைமைத்துவ மற்றும் பிராண்டிங் பயிற்சி நிகழ்ச்சியான பிராண்ட் இன்சைட்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 100க்கும் மேற்பட்ட பிராண்ட் மேலாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பிராண்ட் வளர்ச்சி ஒவ்வொரு குடிமகனின் மதிப்பையும் உயர்த்தும் என சத்குரு கூறினார்.
நாட்டின் பிராண்ட் உயர்ந்தால் குடிமக்களின் மதிப்பும் உயரும்
ஒரு நாட்டின் பிராண்ட் வலுவாக உருவாகும் போது, அந்த நாட்டின் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் மதிப்பும் உலகளவில் உயரும் என்று அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டை வெளிநாடுகளில் அதிக மரியாதையுடன் பார்க்கத் தொடங்கியிருப்பது நாட்டின் பிராண்ட் வளர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியா தனது தேசிய பிராண்டை திட்டமிட்ட முறையில் உருவாக்கி வருகிறது. ஆனால் இன்னும் பெரிய அளவில் அதை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம் என சத்குரு கூறினார்.
பிராண்டிங் முக்கியத்துவம் குறித்து விளக்கம்
பிராண்டிங் என்பது வணிக வளர்ச்சிக்கான கருவி மட்டுமல்ல, தாக்கத்தை உருவாக்கும் முக்கிய அம்சம். யோகா உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டிருந்தாலும், நீண்ட காலமாக சரியான பிராண்டிங் இல்லாததால் அதன் முழு பயன் உலக மக்களுக்கு சென்றடையவில்லை. மனித வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி யோகாவுக்கு இருந்தாலும், பலருக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாததற்கு காரணம் தவறான பிராண்டிங் தான். என்றார்.
பிராண்ட் இன்சைட்ஸ் நிகழ்ச்சி
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிராண்ட் இன்சைட்ஸ் நிகழ்ச்சி, பிராண்ட் மேலாளர்கள், தொழில் உரிமையாளர்கள் மற்றும் மார்க்கெட்டிங் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு தலைமைத்துவ பயிற்சி திட்டமாகும். கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1, 2026 வரை நடைபெறும் இந்த 6வது பதிப்பில், பிராண்டிங்கில் அனுபவமுள்ள பல சர்வதேச நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நோக்கம் சார்ந்த வளர்ச்சி, தெளிவான வணிக மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிராண்ட் உருவாக்கம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சத்குருவால் நிறுவப்பட்ட சத்குரு அகாடமி, தொழில்முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைமைத்துவ மற்றும் தொழில்முறை மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பாரம்பரிய யோக ஞானத்தையும், நவீன வணிக அணுகுமுறைகளையும் இணைத்து செயல்திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.