அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்..
US President Donald Trump: ஈரானில் நிலமை மோசமடையும் முன் அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானுக்கு அனைத்து வகையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்
ஈரானிடம் அணுகுண்டு இருக்க முடியாது என்றும் இது தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் உடனான உரையாடலில் டிரம்ப் பேசுகையில் ”ஈரானிடம் அணுகுண்டு இருக்க முடியாது. நாங்கள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். ஜூன் 13 2025 அன்று ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான வான்வழி தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு பிறகு ட்ரூத் சோசியல் பதிவில் ட்ரம் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் ” நான் ஈரானுக்கு பலமுறை வாய்ப்பளித்தேன் ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் ஈரானால் அதை செய்ய முடியவில்லை. உலகிலேயே மிகவும் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ராணுவ உபகரணங்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. இஸ்ரேலிடம் அது நிறைய உள்ளது. அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் அவர்களுக்கு தெரியும்” என ஈரான எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் சொன்னது என்ன?
ஆனால் அதற்கு ஈரானிய தலைவர்கள் மிகவும் துணிச்சலுடன் பேசியதாகவும் என்ன நடக்கப் போவது என்பது அறியாமல் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவர்கள் அனைவருமே இறந்து விட்டதாகவும் இந்த நிலைமை மேலும் மோசம் அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஈரானிய அணுசக்தி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த செய்தியாளர் சந்திப்பின் போது, “ ஈரான் இடம் அணு ஆயுதம் கிடையாது. ஆனால் அவர்கள் வெற்றி அடைய நான் விரும்புகிறேன் அவர்கள் வளர்ச்சிக்காக அமெரிக்கா உதவ விரும்புகிறது. ஈரானுடன் வர்த்தகத்தையும் நடத்த விரும்புகிறோம். தேவையான அனைத்தும் அமெரிக்கா செய்ய தயாராக இருக்கிறது” என தெரிவித்தார். மேலும் நிலைமை மோசம் அடைவதற்குள் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இது போன்ற பதட்டமான சூழலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ஆறாவது சுற்று பேச்சு வார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூன் 15 2025 அன்று ஓமானில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.