தவறான இந்திய வரைப்படம்.. சர்ச்சை பதிவால் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை..
Israel Defence Force: இஸ்ரேல் பாதுகாப்பு படை, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) பாகிஸ்தானுக்கு சொந்தமானது என தவறாக சித்தரிக்கப்பட்ட இந்தியாவின் சர்வதேச எல்லைகளின் தவறான வரைபடத்தை x வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது. இது சர்ச்சையான நிலையில் பின்னர் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) பாகிஸ்தானுக்கு சொந்தமானது என தவறாக சித்தரிக்கப்பட்ட இந்தியாவின் சர்வதேச எல்லைகளின் தவறான வரைபடத்தை x வலைத்தள பக்கத்தில் வெளியிட்டதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்(Israel Defence Force) மன்னிப்பு கேட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இதில் பதிவேற்றம் செய்யப்பட்ட வரைபடம், எல்லைகளை துல்லியமாக சித்தரிக்க தவறிவிட்டது இது தோராயமான விளக்கம் மட்டுமே என இஸ்ரேல் பாதுகாப்பு படை ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரவேல் பாதுகாப்பு படை இந்த பதிவை செய்த பிறகு இந்திய பயனர்கள் பலரும் மிகவும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருவதோடு உடனடியாக அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை:
Now you understand why India remains neutral. In diplomacy, no one’s really your friend.
— Indian Right Wing Community (@indianrightwing) June 13, 2025
இந்தியா ரைட் விங் கம்யூனிட்டி என்ற எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதில் ” இந்தியா ஏன் எப்போதும் நடுநிலையாக இருக்கிறது என்பது இப்போது உங்களுக்கு புரிய வரும். இந்த அரசியல் உலகில் யாரும் இங்கு உண்மையான நண்பர்கள் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு நேரடியாக பதில் அளித்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. அதில், “ இந்த பதிவு பிராந்தியத்தின் விளக்கப்படம். இது வரைபடம் எல்லைகளை துல்லியமாக சித்தரிக்க தவறிவிட்டது. ஏற்பட்ட எந்த ஒரு குற்றத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு படை படையின் சமூக வலைதள பதிவிற்கு தற்போது வரை இந்திய அரசாங்கம் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்றும் சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் சில பகுதிகள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்பதை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு கூட மே மாதம் பிரதமர் மோடி இதனை மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவரே ஆவார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக டெல் அவிவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் டெல்லியும் ஒன்றாகும். மேலும் இஸ்ரேலில் ராணுவ உபகரணங்கள் விற்பனையில் இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்து வருகிறது.
சர்ச்சை கிளப்பிய பதிவு:
Iran is a global threat.
Israel is not the end goal, it’s only the beginning. We had no other choice but to act. pic.twitter.com/PDEaaixA3c
— Israel Defense Forces (@IDF) June 13, 2025
இது போன்ற சூழலில் இஸ்ரேல் பாதுகாப்பு படையால் வெளியிடப்பட்ட பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வேகமாக அதிகரித்து வரும் பதட்டங்களை தொடர்ந்து மேற்கு ஆசிய பகுதியில் முழுமையான போரின் புதிய அச்சுறுத்தலை இந்த பதிவு எழுப்பி உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில் ஈரானை சுற்றி சிவப்பு வட்டங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவை தெஹரானில் உள்ள ஏவுகணைகளின் வரம்பை குறிப்பதாக கருதப்படுகிறது.
மேலும் சவுதி அரேபியா, ஆப்பிரிக்காவில் லிபியா எத்தியோப்பியா, ஆசியாவில் இந்தியா மற்றும் சீனா, ஐரோப்பாவில் ருமேனியா, பல்கேரியா மற்றும் ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அந்த வட்டாரத்தில் அடங்கும். இந்த பதிவு இந்திய பணியாளர்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த பதிவினை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஒரு சில பயனர்கள் இந்தியாவும் இஸ்ரேலும் நட்பு நாடாக இருக்கும் நிலையில் இந்த பதிவு அவசியம் அற்றது எனவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்