சென்னையில் மட்டும் மழை.. பிற மாவட்டங்களில் எப்படி? பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Tamilnadu Weather Update: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை பொழுதில் காற்றுடன் கூடிய கனமழை ஒரு சில பகுதிகளில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருந்தாலும் அதனை தணிக்கும் வகையில் இந்த மழை பதிவாகி வருகிறது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம்: 2025 ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழையானது மே மாதம் தொடங்கியது. வழக்கமாக தென்மேற்கு பருவ மழை என்பது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே இருக்கக்கூடிய பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும். அந்த வகையில் ஜூன் மாத தொடக்கத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பதிவு என்பது குறைந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது, குறிப்பாக சென்னை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை, வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.
5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:
மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூன் 22 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களை இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை ஜூன் 27 2025 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது ஒரு சில மாவட்டங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக அசௌகரியம் ஏற்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் பதிவான மழை – பிரதீப் ஜான்:
KTCC Rain update light rains in some places in southern Chennai and southern suburbs. Note light short spells in some places. Not all places will get rains. It is weak storm.
Note it is not raining anywhere else in Tamil Nadu leeward side. pic.twitter.com/0UGpyj1qc6
— Tamil Nadu Weatherman (@praddy06) June 21, 2025
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கனமழை ஆங்காங்கே பதிவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், இந்த தொடர் மழை என்பது வெப்பத்தின் தாக்கத்தை குறைத்துள்ளது. இது தொடர்பான தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானின் சமூக வலைதளப் பதிவு படி, “ காஞ்சிபுரம், திருவள்ளூ,ர் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ததாகவும், தென் சென்னை பகுதிகளில் குறுகிய நேரம் மட்டும் லேசான மழை பதிவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் மழை பொழிவு இல்லை என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மழை பொழிவு பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாக கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.