தோல்வி பயம்… விபரீத முடிவு எடுத்த தஞ்சை +2 மாணவி பெற்ற மதிப்பெண்.. கதறிய பெற்றோர்!

Thanjavur 12th Student Suicide : தஞ்சாவூர் மாவட்டத்தில் தோல்வி பயத்தில்  தற்கொலை செய்து கொண்ட மாணவி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 413 மதிப்பெண் பெற்றுள்ளார்.  தோல்வி அடைந்து விடுவோம்  என்ற பயத்தில் தற்கொலை செய்த மாணவி,  413 மதிப்பெண் பெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி பயம்... விபரீத முடிவு எடுத்த தஞ்சை +2 மாணவி பெற்ற மதிப்பெண்.. கதறிய பெற்றோர்!

தஞ்சாவூர் மாணவி பெற்ற மதிப்பெண்

Updated On: 

08 May 2025 14:14 PM

தஞ்சாவூர், மே 08: தஞ்சாவூர் மாவட்டத்தில் தோல்வி பயத்தில்  தற்கொலை செய்து கொண்ட மாணவி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 413 மதிப்பெண் பெற்றுள்ளார்.  தோல்வி அடைந்து விடுவோம்  என்ற பயத்தில் தற்கொலை செய்த மாணவி,  413 மதிப்பெண் பெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது பெற்றோரும் கண்ணீர்விட்டு  கதறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த மாணவி ஆர்த்திகா (17). இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தார். பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்த நிலையில், தேர்வு பயம் காரணமாக நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.

விபரீத முடிவு எடுத்த தஞ்சை +2 மாணவி பெற்ற மதிப்பெண்

இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதி மாணவி ஆர்த்திகா காணாமல் போனார். இதனால், அவரது பெற்றோர்கள்  அவரை அங்குமிங்கும் தேடி பார்த்துள்ளனர். இறுதியில் அவர் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.  உடனே இதனை பார்த்த பெற்றோர் பதறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அதில், மாணவி ஆர்த்திகா  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மாணவி உடலும் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதறிய பெற்றோர்

இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா 413  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். தமிழ் பாடத்தில் 72, ஆங்கிலத்தில் 48, இயற்பியலில் 65, வேதியியலில் 78, தாவரவியலில் 70, விலங்கியலில் 80 என மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 413 மதிப்பெண்கள் எடுத்து  தேர்ச்சி பெற்று இருக்கிறார். மாணவி ஆர்த்திகா தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிந்த பெற்றோர்களும், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 7.92 லட்சம் மாணவர்களில் 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 3.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்த நிலையில், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)