ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கான விதிமுறை மாற்றம்… பொதுமக்கள் மகிழ்ச்சி!
Fingerprint Registration: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு ஆதார் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், 90% துல்லியம் தேவைப்பட்டதால், பொதுமக்கள் சிரமப்பட்டனர். தற்போது, தமிழக அரசின் முயற்சியால், இந்தத் தேவை 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொருட்கள் வழங்கல் வேகமாகி, பொதுமக்களின் சிரமம் குறைந்துள்ளது.

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கான விதிமுறை மாற்றம்
தமிழ்நாடு ஜூன் 20: தமிழகம் (Tamilnadu) முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் (Ration Shop) அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு, ஆதார் அடிப்படையிலான கைரேகை பதிவு (Aadhaar based fingerprint registration) கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்த கைரேகை பதிவு சரியாகப் பதியப்படாதது அல்லது பலமுறை முயற்சி செய்ய வேண்டிய நிலை போன்ற காரணங்களால், பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தக் கஷ்டங்களுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக கூட்டுறவுத்துறை தற்போது கைரேகை அங்கீகார விதியில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு சிரமம்
தமிழகத்தில் 26,618 முழுநேரக் கடைகள் மற்றும் 10,710 பகுதிநேரக் கடைகள் என மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகை, ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் வகையில் இந்தக் கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
கைரேகை 40 சதவீதம் துல்லியமாக ஒத்துப்போனாலே பொருட்கள் வழங்கல்
ஆரம்பத்தில், கைரேகை 40 சதவீதம் துல்லியமாக ஒத்துப்போனாலே பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பின்னர் இந்த விதிமுறை திடீரென மாற்றப்பட்டு, 90 சதவீதம் துல்லியமாக ஒத்துப்போக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலான நேரங்களில் கைரேகை பதிவு சரியாகப் பதியாமல், பொதுமக்கள் பலமுறை கை விரலை வைக்க வேண்டியிருந்தது.
வயதானவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், கைகளில் காயம்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இது பெரும் சிரமமாக அமைந்தது. ஒருவருக்குப் பொருட்கள் வழங்குவதற்கே அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், நீண்ட வரிசைகள் உருவாகி காலவிரயம் ஏற்பட்டது. கைரேகை சரியாகப் பதியாதபட்சத்தில், கருவிழி பதிவு மூலம் சரிபார்க்க வேண்டிய கூடுதல் நடைமுறையும் இருந்தது.
தமிழக அரசின் புதிய மாற்றம்: 70% துல்லியம் போதும்
பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தமிழக கூட்டுறவுத் துறை மத்திய உணவுத் துறையிடம் வேண்டுகோள் விடுத்தது. இதன் விளைவாக, கைரேகை பதிவின் துல்லியத் தேவை 90 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால், பொதுமக்கள் இப்போது ரேஷன் பொருட்களை முன்பை விட விரைவாகப் பெற்றுச் செல்ல முடிகிறது. “தற்போது, கைரேகை பதிவு ஒருமுறை வைத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துள்ளதால், முன்பை விட சற்று வேகமாக பில் போட முடிகிறது” என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
70 சதவீத துல்லியத்தை அறுபதாக்க கோரிக்கை
மேலும், இந்த 70 சதவீத துல்லியத்தை இன்னும் 10 சதவீதம் குறைத்து, 60 சதவீதமாக ஆக்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம், ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தை மென்மையாக்கி, பொதுமக்கள் விரைவாகத் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது.