போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. 6 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Tamil Nadu Transport Workers Salary Hike: தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,420 முதல் ரூ.6,460 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும். நிலுவைத் தொகை 2024 செப்டம்பர் முதல் 4 தவணைகளாக வழங்கப்படும். இந்த உயர்வு, 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தின் பின்னர், அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான பேச்சுவார்த்தையின் விளைவாக அறிவிக்கப்பட்டது. 85 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. 6 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு..!

அமைச்சர் சிவசங்கருடன் போக்குவரத்து சங்கங்கள்

Published: 

29 May 2025 23:15 PM

சென்னை, மே 29: போக்குவரத்து ஊழியர்களுக்கு (Tamil Nadu Transport Workers) கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சமாக ரூ. 6,460 வரை பணப்பலன்கள் ஊழியர்களுக்கு கிடைக்கும். அதேபோல், நிலுவை தொகையானது 2024 செப்டம்பர் 1ம் தேதி முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் (Minister SS Sivasankar) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

6 சதவீதம் உயர்வு:

கடந்த 2025 மே 27ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்களின் சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் 12 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பில் இன்று அதாவது 2025 மே 29ம் தேதி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு சங்கங்களை அழைந்தது. இந்த ஒப்பந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சியில் 85 சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, 7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்:


இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமார் 85 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டது. பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஒவ்வொரு போக்குவரத்து சங்கமும், ஒவ்வொரு விதமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

கடந்த 2021ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட 15 ஊதிய பேச்சுவார்த்தை வெற்றிகரமான தீர்வை எட்டியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, சுமூகமாக முடிக்கப்பட்டது. அதேபோல், இப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் 6 சதவீத ஊதிய உயர்வு பலனில் போக்குவரத்து ஊழியர்கள் பயனடைவர்கள். இந்த பேச்சுவார்த்தையும்போது, சுமார் 86 தொழிற்சங்கங்களில்ம் 64 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு கையெழுத்து ஒப்பந்தமானது” என்று தெரிவித்தார்.