ஓய்வு பெறும் அமைச்சர் துரைமுருகன்? திமுகவில் நிகழப்போகும் அதிரடி மாற்றங்கள்.. ப்ளான் என்ன?
DMK: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக 87 வயதாகும் திமுக பொதுச் செயலாளருக்கு ஓய்வு அளிக்கப்படும் எனவும் அவருக்கு பதிலாக ஆ ராசா நியமனம் செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, ஜூன் 29,2025: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கலைஞர் கருணாநிதி இருந்த காலம் முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி மறைந்த பிறகு திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பெரும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் இந்த கருத்திற்கு தற்போது திமுக தயாராகி வருவதாக அரசியல் வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
திமுகவில் ஆதிக்கம் செலுத்தும் மூத்த அமைச்சர்கள்:
முக்கியமாக திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனுக்கு 87 வயது ஆகிறது. சுமார் 50 ஆண்டுகளாக அவர் சட்டமன்ற பதவியை வகித்து வருகிறார். அதேபோல், கட்சியின் பொருளாளராக இருக்கும் டி ஆர் பாலுவிற்கு 83 வயதாகிறது சுமார் 40 ஆண்டு காலமாக நாடாளுமன்ற பதவியில் இருந்து வருகிறார். இதே போல அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், அமைச்சர் கே என் நேரு அமைச்சர், ஐ பெரியசாமி உள்ளிட்டவர்கள் 70 வயதை தாண்டியவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைய தலைமுறையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் மூத்த அமைச்சர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. மேலும் மூத்த அமைச்சர்களின் வாரிசுகளும் அடுத்த அடுத்த பதவியில் இடம்பெற்று வருகின்றனர். இதனால் திராவிட முன்னேற்ற கழகத்தில் புதிதாக இருக்கும் இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கருத்துக்கள் வெளியானது.
அதே சமயம் கட்சி நிர்வாகிகளிடம் உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தொகுதிகள் வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தார். அதில் மூத்த அமைச்சர்களுக்கு ஓய்வு கொடுத்து இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் கருத்துக்கள் எழுந்த நிலையில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வழிக்காட்டி குழு:
அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தில் வழிகாட்டி குழு ஒன்று அமைக்கப்பட்டு ஓய்வு பெற்ற மூத்த அமைச்சர்கள் இதில் இடம்பெறுவார்கள் எனவும் அவர்கள் இளைய தலைமுறைகளுக்கு தக்க ஆலோசனை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வரிசையில் முதலாவதாக இடம்பெற்று இருப்பது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தான். 87 வயதாகும் அவருக்கு சமீப காலமாக உடல் நல குறைவு ஏற்படுவதால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மேலும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஓய்வு பெறும் அமைச்சர் துரைமுருகன்?
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் மீண்டும் பொதுக்குழு கூட்டு அதனை மேற்கொள்ளலாம். அந்த வகையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய பத்திரிகையாளர் ப்ரியன், “ துரைமுருகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் அடிபட்டு வருவதாகவும்.
அப்படி துரைமுருகனுக்கு ஓய்வு கொடுத்தால் அடுத்தபடியாக பொருளாளராக இருக்கும் டி ஆர் பாலுவிற்கு ஒரு படி ஏற்றமாக பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக கருதப்படும் நிலையில் ஆ ராசா போன்றவர்களை பொதுச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றங்கள் 2026 செப்டம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.