ED Raid : டாஸ்மாக் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை!

Enforcement Directorate 2nd Day Raid in Visakan's House | சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியதை அடுத்து இரண்டு நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகிறது.

ED Raid : டாஸ்மாக் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 May 2025 08:00 AM

சென்னை, மே 17 : சென்னையில் டாஸ்மாக் (TASMAC – Tamil Nadu State Marketing Corporation) இயக்குனர் விசாகன் வீட்டில் இன்று (மே 17, 2025) இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (மே 16, 2025) காலை முதலே விசாகன் வீட்டிலும் அவரை தனியாக அழைத்துச் சென்று அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், டாஸ்மாக் இயக்குநர் வீட்டில் இரண்டாவது நாளாகம் தொடரும் சோதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை

2025 மார்ச் மாதத்தில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மொத்தம் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமன்றி, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அதிகாரிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்தன.

டாஸ்மாக் இயக்குனர் வீட்டில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை

இந்த நிலையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று (மே 16, 2025) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் விசாகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதன் அடிப்படையில் அவரை நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு நேற்று இரவு அவர் மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணை

அதனை தொடர்ந்து அவரது வீட்டிலும் விசாரணை நடைபெறலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று (மே 17, 2025) காலை முதல் விசாகன் வீட்டில் மீண்டும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.