திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

Tiruchendur murugan temple Consecration : திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தமிழில் குடமுழுக்கு என்பது ஏற்கனவே முடிவு செய்த ஒன்று என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2025 ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயில்

Updated On: 

18 Jun 2025 21:28 PM

தூத்துக்குடி, ஜூன் 18 : திருச்செந்தூர் முருகன் கோயிலில் (Tiruchendur murugan temple) தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தமிழில் குடமுழுக்கு (Tiruchendur murugan temple Consecration) என்பது ஏற்கனவே முடிவு செய்த ஒன்று என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (Minister Sekar Babu) தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில்

கடைசியாக 2009ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி திருச்செந்தூர் முருகனுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் 2025 ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்பில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

தற்போது, குடமுழுக்குக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு

இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும்.

தமிழில் குடமுழுக்கு என்பது ஏற்கனவே முடிவு செய்த ஒன்று. பழனி முருகன் கோயில், மருதமலை கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது தான் முதல்வர் ஸ்டாலின் கொள்கை. யாரும் செல்லி தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக கோயில் நிர்வாகமும் இதுபற்றி அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயிலில் 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. மேலும், காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.