7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலையால் அவதியில் மக்கள்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 7 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலையால் அவதியில் மக்கள்..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Jun 2025 06:56 AM

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் ஒரு பக்கம் இருந்தாலும், வெப்ப நிலையில் தாக்கம் மற்றொரு பக்கம் இருக்கிறது. கடந்து சில தினங்களுக்கு முன்பு வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்பட்ட நிலையில் ஜூன் 27 2025 தேதி ஆன நேற்று சுமார் 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் 39 டிகிரி செல்சியஸும், தூத்துக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளியில் 38.5 டிகிரி செல்சியஸும், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸும், பரங்கிப்பேட்டையில் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலையால் அவதியில் மக்கள்:

வெப்பநிலை அதிகரித்து வரும் காரணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் ஒரு சில மாவட்டங்களில் இருந்தாலும் பிற மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடக்கும் வெப்பநிலை:


அதேபோல தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 28 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று, அதாவது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மத்திய வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடலில் வடக்கு பகுதிகள், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.