8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்.. வாணியம்பாடியில் நடந்தது என்ன?

Tirupattur 8 Dies Affected by Deadly Disease : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் 2023ஆம் ஆண்டில் நடந்த நிலையில், இந்த உயிரிழப்புக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக சுத்தம் செய்யாததே உயிரிழப்புக்கு காரணம் என சி.எம்.சி மருத்துவர்கள் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்.. வாணியம்பாடியில் நடந்தது என்ன?

மாதிரிப்படம்

Updated On: 

30 May 2025 07:33 AM

திருப்பத்தூர், மே 30 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல்  சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பல் மருத்துவமனையில் பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும கருவியை முறையாக சுத்தப்படுத்தாததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுததடுத்து உயிரிழந்தனர். ஆனால், அப்போது இவர்கள் ஏன் உயிரிழந்தனர் என்பது கண்டுபிடிக்கவில்லை.

பல் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து பலி

அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பாக தமிழக பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு விசாரணை தொடங்கியது.

இந்த குழு நடத்திய விசாரணையில் தற்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 பேர் நியூரோ மெலியாய்டோசிஸ் பாக்டீரியா என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டதாக, அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் 8 பேரும் தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது, அங்கு பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவியை முறையாக சுத்தப்படுத்தவில்லை என்றும் ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

விசாரணையில் அதிர்ச்சி

இப்படி சுத்தப்படுத்தாத கருவியை அனைத்து நோயாளிகளுக்கு பயன்படுத்தியால் நியூரோ மெலியாய்டோசிஸ் பாக்டீரியா (Neuromelioidosis bacterial infection) என்ற தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையில் பெரியோஸ்டீல் எலிவேட்டர் எனும் அறுவை சிகிச்சை கருவி மூலம் saline பாட்டிலை திறந்து மூடி பயன்படுத்தி உள்ளனர்.

இதனால், 10 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது.  நியூரோ மெலியோய்டோசிஸ் தொற்று என்பது மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடியது ஆகும். இந்த தொற்று நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிப்பதால், உடனடி இறப்புகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, பார்வை குறைபாடு உள்ளிட்டவை அறிகுறிகளாகும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த தொற்றால் 2022-23ஆம் ஆண்டுக்கு இடையில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 17 பேர் திருப்பத்தூரிலும், ராணிப்பேட்டையில் 2 பேரும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதில் திருப்பத்தூரியில் 8 பேர் உயிரிழந்தவர்களும் அடங்குவர் என்று விசாரணையில் தெரிந்தது.