Virat Kohli: கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்..? இதுவே காரணம்..! உண்மையை உடைத்த விராட் கோலி!
Virat Kohli Captaincy Exit: கேப்டன்ஷியானது அதிக அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகள் விராட் கோலியின் மன ஆரோக்கியத்தை பாதித்ததாகவும், தோனி மற்றும் கேரி கிர்ஸ்டனின் ஆதரவு அவருக்கு உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். கேப்டன் பதவி அவருக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியது எனவும், ஓய்வு எடுத்து மீண்டும் விளையாட்டை ரசிக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியில் (Indian Cricket Team) மிகவும் வெற்றிகரமான கேப்டனாக எம்.எஸ்.தோனிக்கு பிறகு, விராட் கோலி ஜொலித்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி (Virat Kohli) இந்தியாவின் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். பின்னர், பிசிசிஐ அவரை ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபோது, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடனான கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி (Royal Challengers Bengaluru) கேப்டன் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்தநிலையில், கேப்டன் பதவி தன்னை மனரீதியாக ஒடுக்கியதாக விராட் கோலி தற்போது தெரிவித்துள்ளார்.
மன ஆரோக்கியத்தில் தாக்கம்:
தனது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான கட்டத்தைப் பற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போல்ட் டைரீஸ் பாட்காஸ்டில் விவாதித்த விராட் கோலி, இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவி எவ்வாறு தனது மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை தெளிவாக விளக்கினார். இதில் விராட் கோலி பேசியதாவது, “ஒரு கட்டத்தில் அனைத்து விதமான கேப்டன் பதவி எனக்கு மிகவும் கடினமாக மாறியது. ஒவ்வொரு போட்டியிலும் எனது மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அது கேப்டன் பதவியாக இருந்தாலும் சரி, பேட்டிங் ஆக இருந்தாலும் சரி.. எல்லா கவனமும் என் மீதுதான் இருந்தது. மக்கள் என்னை 24×7 பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் மனதளவில் முற்றிலும் சோர்வடைந்திருந்தேன். நான் மீண்டும் விளையாட்டை ரசிக்கத் தொடங்க முடிவு செய்தேன். கேப்டனாக இருந்த அந்த நேரத்தில், எனது ஆட்டத்தை என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை, ஒவ்வொரு கணமும் அழுத்தத்தில் கழிந்தது.
எந்த அழுத்தமும் இல்லாமல் ஒரு சாதாரண வீரரை போல் விளையாட விரும்பினேன். இந்த சீசனில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது என்ன நடக்கும்?” கேள்விகளுக்கு மத்தியில் வாழ்வது தனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.” என்று தெரிவித்தார்.
தோனிக்கு நன்றி தெரிவித்த கோலி:
தனது ஆரம்பகால சர்வதேச வாழ்க்கை குறித்து பேசிய விராட் கோலி,” நான் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறிய போதெல்லாம், எனக்கு தேவைப்படும் நேரத்தில் என்னை ஆதரவளித்த எம்.எஸ். தோனி மற்றும் அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுக்கு நன்றி. இந்திய U-19 அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகும், சர்வதேச அளவில் தனது இடம் நிலைநாட்டப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
2022 ஆம் ஆண்டு மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஓய்வெடுக்க கிரிக்கெட்டிலிருந்து ஒரு மாத கால இடைவெளி எடுத்தேன். இந்த இடைவெளி தனக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது.” என்று தெரிவித்தார்.