CSK vs PBKS: தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய சென்னை.. புள்ளி பட்டியலில் பஞ்சாப் முன்னேற்றம்!
Chennai Super Kings vs Punjab Kings Match Highlights: ஐபிஎல் 2025ன் 49வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 190 ரன்கள் குவித்தது. யுஸ்வேந்திர சாஹலின் ஹாட்ரிக் சென்னையின் ஸ்கோரை கட்டுப்படுத்தியது. சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். பஞ்சாப், ஷ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார்.

எம்.எஸ்.தோனி அவுட்டாகி சென்ற காட்சி
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 49வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 190 ரன்கள் குவித்தது. ஒரு நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் என்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், இதற்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal) ஹாட்ரிக் எடுத்து சென்னை அணியின் ஸ்கோர் எண்ணிக்கையை கட்டுபடுத்தினார். சென்னை அணி கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 18 ரன்களுக்கு இழந்தது. சென்னை அணிக்காக சாம் கரன் 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் எடுத்தார்.
டெவால்ட் பிரெவிஸ் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்காக சாஹல் 3 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் மார்கோ ஜான்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
191 ரன்கள் இலக்கு:
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்தது. அதிரடியாக தொடங்கிய பிரியான்ஷ் ஆர்யா 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பிரப்சிம்ரன் சிங்குடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். இருவரும் இணைந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நொறுக்க தொடங்கினர்.
ஆரம்பத்தில் பிரப்சிம்ரன் சிங்குக்கு தட்டி கொடுத்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், பிரப்சிம்ரனின் அரைசதத்திற்கு பிறகு ருத்ரதாண்டவம் ஆட தொடங்கினார் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து பிரப்சிம்ரன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த வதேரா 5 ரன்களிலும், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஷஷாங்க் சிங்கும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில், மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் பதிரனா வீசிய ஒரு ஓவரில் மட்டுமே சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்டார்.
கலக்கிய ஷ்ரேயாஸ் ஐயர்:
𝐒𝐚𝐫𝐩𝐚𝐧𝐜𝐡 𝐚𝐤𝐞𝐥𝐚 𝐚𝐚𝐭𝐚 𝐡𝐚𝐢𝐧!🔥🦁 pic.twitter.com/r4dwn1pPoj
— Punjab Kings (@PunjabKingsIPL) April 30, 2025
தொடர்ந்து, பதிரனா வீசிய 19வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 72 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் கலீல் அகமது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தார். இருப்பினும், உள்ளே வந்த ஜான்சன் ஒரு பவுண்டரி அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவி செய்தார்.
சென்னை அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகளும், நூர் அகமது மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.