மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு… விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை… நடிகர் விஷால் ஓபன் டாக்
நடிகர் விஷால் சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது அவரது படங்களுக்காக அல்ல. அவர் உடல்நலம் குறித்த செய்திகளிலேயே அதிகமாக வருகின்றது. முன்னதாக மத கஜ ராஜா படத்தில் கை நடுக்கத்துடன் பேசியது வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது மயங்கி விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஷால் (Actor Vishal) சமீபத்தில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரது நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மத கஜ ராஜா படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இதில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி, சோனு சூட், மணிவண்ணன், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் முழுக்க முழுக்க வெற்றியடைய காரணம் சந்தானத்தின் காமெடி மட்டுமே. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் கிடப்பில் கிடக்கும் பல படங்களுக்கு ஊக்கமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் விஷால் உடல் நலக் குறைவால் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். அதில் முன்னதாக மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்டு விஷால் பேசினார். அப்போது மைக் பிடித்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது கை நடுங்கத் தொடங்கியது. இது தொடர்பார்ன வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து பிறகு பேசிய நடிகர் விஷால் அந்த விழாவில் கலந்துகொண்ட போது தனக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும் ஆனால் அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்றே உடல் நிலையை பொருட்படுத்தாமல் வந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே வைரலானது.
இந்த நிலையில் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகத்தில் திருநங்கைகளுக்கான விழா நடைப்பெற்றது. அதில் திருநங்கைகள் அழகிப் போட்டி நடைப்பெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்தது அங்கு இருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நடிகர் விஷால். பிறகு விஷால் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட விளக்கத்தில் நடிகர் விஷால் அன்று மதியம் சாப்பிடவில்லை என்றும் அதனால் தான் அவர் மயங்கி விழுந்தார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த செய்தி வைரலான பிறகு நடிகர் விஷால் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கியது. இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் விஷால், மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் தான் விட்டுவிட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் தன்னை விமர்சிப்பவர்களை பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.