சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடியா? கூகுள் நிறுவனம் குறித்து வெளியான ஆச்சரிய தகவல்
Google Pays crores for Sundar Pichai's safety : கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக 2024ம் ஆண்டில் மட்டும் ரூ.67.8 கோடியை Alphabet Inc நிறுவனம் செலவிட்டுள்ளது. இந்த பாதுகாப்பு செலவுகள் அவரது தனிப்பட்ட நன்மைகளுக்கானது அல்ல எனவும், அவர் வகிக்கும் பதவிக்காக வழங்கப்படுவதாகவும் Alphabet நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து, சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவர் சுந்தர் பிச்சை (Sundar Pichai). அவரின் கல்வி, திறமை மற்றும் தொலைநோக்கு பார்வை இன்று அவரை கூகுள் (Google) மற்றும் அதன் தலைமை நிறுவனமாகிய ஆல்பபெட் (Alphabet) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றியிருக்கிறது. பலகோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் கூகுள் போன்ற சேவைகளின் பின்னே இருக்கும் முக்கிய மூளையாக சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். கூகுகளின் தலைமை நிறுவனமான Alphabet Inc. தனது தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக 2024-ஆம் ஆண்டு மட்டும் 8.27 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாக யுஎஸ் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (US Securities and Exchange Commission) தாக்க செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.68 கோடி என கணக்கிடப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிண்ட் இணையளத்தில் வெளியான செய்தியின் படி இது கடந்த 2023-ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புச் செலவான 6.78 மில்லியன் டாலரை விட 22% அதிகமாகும். இதுகுறித்து ஆல்பபெட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பாதுகாப்பு செலவுகள் சிஇஓ பதவியின் தனித்துவத்தைக் காப்பதற்கும், நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வழங்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறது. மேலும் இது அவரது தனிப்பட்ட நலனாகக் கருதப்படவில்லை.
பாதுகாப்பு செலவுகளுக்கு என்னென்ன உள்படுகிறது?
-
சுந்தர் பிச்சையின் வீட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
-
பாதுகாப்பு ஆலோசனைகள்
-
கண்காணிப்பு சேவைகள்
-
டிரைவர் மற்றும் பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து
-
பயணங்களுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
மற்ற முக்கிய அதிகாரிகளுக்கும் சம்பள உயர்வு
சுந்தர் பிச்சை மட்டுமல்லாமல் Alphabet நிறுவனத்தின் பிற முக்கிய அதிகாரிகளும் கணிசமான சம்பள உயர்வுகளை பெற்றுள்ளனர். கூகுளின் தலைமை சட்ட அதிகாரியான கென்ட் வாக்கர் கடந்த 2024 ஆம் ஆண்டு ரூ.256 கோடி சம்பளமாக பெற்றுளளார். அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு 231.6 கோடியாக சம்பளம் இருந்திருக்கிறது. அதே போல புதிய நிதி அதிகாரி அனட் அஷ்கென்ஸி என்பவர் ரூ. 424.24 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.
ஆல்பபெட் நிறுவனத்தில் முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர்களின் சராசரி ஊதியம் கடந்த 2024 ஆம் ஆண்டு 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது ரூ.2.81 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் ரூ.2.67 கோடியாக இருந்திருக்கிறது.
ஆல்பபெட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் நிலவும் போட்டிகள், நிர்வாக சிக்கல்கள் போன்ற பலவகை அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்வதற்காகவும், நிறுவனத்தின்மேல் நம்பிக்கை ஏற்படுத்தவும் பாதுகாப்பை அதிகப்படுத்துவது மற்றும் ஊதிய உயர்வு போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.