சென்னையில் கொட்டிய கனமழை.. மழை தொடருமா? பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Tamilnadu Weather Update: தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஜூன் 20, 2025 அன்று வெப்பத்தை தணிக்கும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பதிவானது. இந்த மழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம்: கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகிறது. அந்த வகையில் 20 ஜூன் 2025 தேதி ஆன நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி கடந்து வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸும், சென்னை மீனம்பாக்கத்தில் 39.6 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 39 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியில் 39.1 டிகிரி செல்சியஸும், தூத்துக்குடியில் 39.2 டிகிரி செல்சியஸும், ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸும், கரூரில் 38.5° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
அதிகரித்து வரும் வெயிலின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அலுவலகம் செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் உயரும் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வரும் ஜூன் 26 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வார இடைவெளிக்கு பின் பதிவான மழை – பிரதீப் ஜான்:
Rains are back from Today. North Chennai got good rains in the evening. Some other parts of the City too might get will get rains as more storms are forming west of the city
——————————-
After a break of almost one week of break in thunderstorms across the… pic.twitter.com/n72Von92UD— Tamil Nadu Weatherman (@praddy06) June 20, 2025
வெயிலின் தாக்கத்தால் கடுமையான உஷ்ணத்தை தணிக்கும் வகையில் 20 ஜூன் 2025 அன்று மாலை நேரத்தில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக வடசென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பதிவானது கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளிக்கு பிறகு மழை பதிவு இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் மணலி, கத்திவாக்கம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை இருந்ததாகவும், சுமார் 30 மில்லி மீட்டர் மழை மணலி மற்றும் கத்திவாக்கத்தில் பதிவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்ததாகவும் மாலை நேரத்தில் வட சென்னையில் மழை பதிவானது போல் இரவு நேரத்தில் தென் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மழை பதிவானது. மேலும் தென் சென்னையில் மழை ஒட்டுமொத்த ஜூன் மாத மழையின் அளவு சுமார் 100 முதல் 150 மில்லி மீட்டர் வரை குறைந்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.