வைகாசி அமாவாசை.. ஒரே இடத்தில் கூடும் 12 சிவபெருமான்.. எங்கு தெரியுமா?
வைகாசி அமாவாசை 2025 மே 26 அன்று வருகிறது. சீர்காழியில் 12 சிவாலயங்களில் இருந்து 12 ரிஷப வாகனங்களில் ஈசன் வருகை தந்து திருநாங்கூரில் கூடி மதங்க மகரிஷிக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பது புண்ணியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம் குடும்ப பிரச்னைகள், தொழில் தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

வைகாசி அமாவாசை வழிபாடு
பொதுவாக இந்து மதத்தில் அமாவாசை என்பது முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்கள் நம் குலத்தை காக்க வேண்டும் என எண்ணி அவர்களுக்கு விரதம் இருப்பது, வழிபாடுகள் மேற்கொள்வது, தர்ப்பணம் செய்வது போன்ற பல விஷயங்களை குடும்பத்தினர் செய்வார்கள். அந்த வகையில் வைகாசி அமாவாசை 2025 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி வருகிறது. சிவபெருமானுக்குரிய விசேஷ நாளாக பார்க்கப்படும் திங்கட்கிழமை அமாவாசை வருவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வைகாசி அமாவாசை தினத்தில் நடைபெறும் ரிஷப வாகன சேவை நிகழ்வு பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
ஒரே இடத்தில் 12 சிவபெருமான்கள்
இந்த சிறப்பு நாளில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காளியை சுற்றி இருக்கும் 12 சிவ ஆலயங்களில் இருக்கும் ஈசன் 12 ரிஷப நந்தி வாகனத்தில் அமர்ந்து வருகை தருவார்கள். அவர்கள் திருநாங்கூர் என்ற இடத்தில் கூடி மதங்க மகரிஷிக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும். இப்படியாக 12 சிவபெருமானையும் ஒரே இடத்தில் காணக்கூடிய பாக்கியம் கெட்டியவர்களுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் நந்தி பகவானின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்க பெறுவது மிகுந்த புண்ணியமாக பார்க்கப்படுகிறது. மேலும் 12 சிவபெருமான்கள் ஒரே இடத்தில் கூடும்போது அந்த இடம் மிகுந்த நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் அனைத்து கோயில்களிலும் வீற்றிருக்கும் இந்த நந்திபெருமானையும், இறைவனையும் நாம் தனித்தனியாக சென்று பார்க்க முடியாது. இதனால் திருமண வரன் விரைந்து அமையும். தொழிலில் வளர்ச்சி கிடைக்கும்.
செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
ஒருவேளை உங்களால் சீர்காழிக்கு செல்ல முடியாவிட்டால் என்ன செய்யலாம் என்ற கேள்வி எழலாம். அப்படி இருப்பவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் அருகில் இருக்கும் எந்த ஒரு சிவ ஆலயத்திற்கும் சென்று அங்கிருக்கும் நந்தி பகவானே வழிபாடு செய்யலாம். மேலும் பூ பழம் தேங்காய் உள்ளிட்ட அர்ச்சனை பொருள்களை கொடுத்து வழிபடுவது இன்னும் சால சிறந்தது. மேலும் நந்தி பகவானிடம் நாம் என்ன வேண்டுதல்களை வைத்தாலும் அது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இப்படியாக நாம் செய்யும்போது அது சிவன் பாதங்களில் சரணடைந்ததற்கு சமமானதாகும். ஆகவே குடும்ப பிரச்சினைகள் தொடங்கி தொழிலில் ஏற்படும் தடைகள் வரை அனைத்தையும் சிவபெருமானும் நந்தி பகவானும் இந்நாளில் வழிபட்டால் பார்த்துக் கொள்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)