இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ – மருத்துவ உலகில் புதிய சாதனை
Breakthrough in Medical AI : புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்வதன் மூலம் ஒருவருக்கு இதய நோய், எலும்பு முறிவுகளுக்கான ஆபத்துகளை முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியும். இதற்கு சில விநாடிகளே ஆகும். சாதாரணமாக இதனை மருத்துவ பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள 5 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.

Breakthrough In Medical Ai
சாதாரண எலும்பு அடர்த்தி பரிசோதனைகளில் (Bone Density Scans) இருந்து இதய நோய் மற்றும் எலும்பு முறிவுகளுக்கான ஆபத்தை வெறும் சில விநாடிகளில் கண்டுபிடிக்கக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவியை ஆஸ்திரேலியா (Australia) மற்றும் கனடா விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகமும் கனடாவின் மானிடோபா பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இது, முதியோர்களுக்கான வழக்கமான எலும்பு பரிசோதனைகளின் போது இதய நோய் மற்றும் எலும்பு முறிவுகளுக்கான ஆபத்தை மிக விரைவில் கண்டறிந்து தீர்வுகள் எடுக்க உதவும் என நம்பப்படுகிறது.
இதய நோய் பாதிப்பை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ கருவி
இந்த ஏஐ கருவி, Vertebral Fracture Assessment எனப்படும் எலும்பின் ஸ்கேன் படங்களை ஆராய்வதன் மூலம், வயிற்றுப் பகுதியில் உள்ள தமனிகளில் பாதிப்புகள் (Abdominal Aortic Calcification) உள்ளதைக் கண்டுபிடிக்கிறது. இது இதய நோய், மூளை பாதிப்பு போன்றவற்றுக்கு முக்கியமான அறிகுறிகளாக விளங்குகிறது. முன்னதாக, ஒரு நிபுணரால் இந்த பாதிப்பு இருப்பதைக் கண்டறிய ஒவ்வொரு படத்திற்கும் 5 முதல் 6 நிமிடங்கள் வரை தேவைப்பட்டது. ஆனால் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு கருவியின் மூலம் ஆயிரக்கணக்கான படங்களை வெறும் ஒரு நிமிடத்திற்குள் அலசிவிடும் திறன் கொண்டது.
இதய நோய் ஆபத்தை உணராத பெண்கள்
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானி காசாண்ட்ரா ஸ்மித் கூறுகையில்: ‘பெரும்பாலான பெண்கள் இதய நோய்க்கு தக்க பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. எளிய எலும்பு பரிசோதனையில் இந்த அல்காரிதத்தைப் பயன்படுத்துவதால், பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. பெரும்பாலான பெண்கள் இந்த பிரச்னை இருப்பதை அறியாமல் விடுகின்றனர். இது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு முக்கிய ஆராய்ச்சியாளரான மார்க் சிம் தெரிவித்ததாவது வயிற்றுப் பகுதியில் உள்ள தமனிகளில் பாதிப்புகள் இதய நோய்க்கான அறிகுறியாக மட்டுமல்ல, எலும்பு பகுதிகளில் முறிவும் ஏற்படும் அபாயத்தையும் தெரிவிக்கும் ஒரு மிக வலுவான கண்டுபிடிப்பாக உள்ளது. இது, எலும்பு உறுதி அளவுகள், கடந்த கால பாதிப்புகள் போன்ற வழக்கமான காரணங்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது மூலமாக, வழக்கமான எலும்பு பரிசோதனைகளின் போது நோயாளிகளின் இரத்த நாள அமைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களும் கிடைக்கும். இது மருத்துவர்களால் தவிர்க்கப்பட்ட ஒரு முக்கியமான உடல் நிலையை கவனத்தில் கொள்ள வழிவகுக்கும்.
புதிய செயற்கை தொழில்நுட்பத்தின் வாயிலாக, எளிய எலும்பு அடர்த்தி சோதனைகளிலேயே இதய நோய், எலும்பு முறிவுகளுக்கான ஆபத்துகளை முன்கூட்டியே அறிய முடியும் என்பதைக் இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கிறது. குறிப்பாக வயதான பெண்கள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு இது உயிர்க்காக்கும் ஒரு அம்சமாக மாறக்கூடும். மருத்துவ உலகில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில், இத்தகைய ஏஐ கருவிகள் மருத்துவ பரிசோதனைகளில் மேலும் அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.