Kannappa Movie Review: பிரமாண்ட படைப்பு.. கண்ணப்பா படம் எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ!

விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளிவந்துள்ள "கண்ணப்பா" திரைப்படம், கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் சொல்கிறது. பிரமாண்டமான காட்சிகள், நட்சத்திர நடிகர்கள் பட்டாளம் படத்தின் சிறப்புகளாக அமைந்திருந்தது. இந்த படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் இன்று (2025, ஜூன் 27) ரிலீசாகியுள்ளது.

Kannappa Movie Review: பிரமாண்ட படைப்பு.. கண்ணப்பா படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!

கண்ணப்பா பட விமர்சனம்

Published: 

27 Jun 2025 14:22 PM

இந்திய சினிமாவில் வரலாற்று ரீதியான படங்கள் என்பது ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு கடவுளை மையப்படுத்தி வந்த நிலையில் சமீபகாலமாக இதிகாசங்களை மையப்படுத்தி வர தொடங்கியுள்ளது. அதிலிருந்து சற்று விலகி மிகப்பெரிய சிவ பக்தராக அறியப்பட்ட கண்ணப்பரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தெலுங்கில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் “கண்ணப்பா”. முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த படத்திற்கான கதையை ஹீரோ விஷ்ணு மஞ்சு எழுதியுள்ளார். ஸ்டீபன் டேவிஸ் இசையமைத்த கண்ணப்பா படத்திற்கு ஷெல்டன் சோவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரம்மானந்தம், சரத்குமார், முகேஷ் ருஷி, பிரம்மாஜி, சிவ பாலாஜி, ரகுபாபு, சப்தகிரி தேவராஜ், லாவி பஜ்னி, அர்பித் ரங்கா, சம்பத் ராம், மதுபாலா, ஐஸ்வர்யா, ப்ரீத்தி முகுந்தன், சுரேகா வாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.

படத்தின் கதை

திண்ணாடு (விஷ்ணு மஞ்சு) இளம் வயதிலேயே தனது தாயை இழந்து தந்தை நடநாதர் (சரத்குமார்) அரவணைப்பில் வளர்கிறார். நடநாதர் தனது மகனை ஒரு கொடுங்கோலனாக வளர்க்கிறார். நடநாதர் தலைவராக இருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் தாய்க்காக நரபலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒருமுறை, திண்ணாடுவின் நண்பர் பலியிடப்படுகிறார். அன்றிலிருந்து, திண்ணாடு கடவுள் இல்லை என்ற நாத்திக எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்.

அதேசமயம் திண்ணாடு இருக்கும் இடத்திற்கு அருகில் வாயு லிங்கம் ஒன்று உள்ளது. அதனை எடுக்க வரும் காளமுகனின் (அர்பித் ரங்கா) தம்பியை திண்ணாடு கொல்கிறான். இதனால் வெகுண்டெழும் காளமுகன் லட்சக்கணக்கான படையுடன் தாக்குதல் நடத்த வருகிறான். அருகிலுள்ள பகுதிகளின் உதவியை நடநாதர் கோருகிறார். இதனிடையே இவர்களின் ஒரு பகுதியைச் சேர்ந்த இளவரசி நேமாலியை (ப்ரீதி முகுந்தன்) திண்ணாடு விரும்புகிறான்.

இதன் காரணமாக நடநாதருக்காக ஒன்று சேரும் பிற கூட்டத்தினரிடையே பிரச்னை எழுகிறது. இதன் முடிவில் திண்ணாடு தன்னுடைய கூட்டத்தில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. அவனுடன் நேமாலியும் செல்கிறாள். இதில் திண்ணாடு நாத்திகர் என்னும் நிலையில், நேமாலி சிவ பக்தையாக இருக்கிறாள். இதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளால் திண்ணாடு எப்படி தீவிர சிவ பக்தன் கண்ணப்பாவாக மாறுகின்றான் என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கமாகும்.

படம் தியேட்டரில் பார்க்கலாமா?

பொதுவாக புராண காலத்தை மையப்படுத்திய கதைகள் நாம் கதைகளாகவும், தொடர்களாகவும் பார்த்திருப்போம். அதனை எப்படி ஒரு 3 மணி நேர காட்சிகளாக சொல்வதில் தான் ரசிகர்களை ஈர்க்கும் யுக்தி உள்ளது. அதனை கண்ணப்பா சரியாக செய்துள்ளது என சொல்லலாம். சிவன் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்ததால் தன்னுடைய கண்ணை பறித்து சிவனுக்கு வைத்து பக்தியை நிரூபித்த கண்ணப்பரின் கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் இப்படத்தில் திண்ணனார் எப்படி கண்ணப்பர் ஆனார் என்பதை சற்றே வித்யாசமாக சொல்லியிருக்கிறார்கள். பிரமாண்ட காட்சிகள் வழியே சொல்ல வந்த விஷயத்தை மிகவும் சுவாரஸ்யமாக தெரிவிக்க எடுத்த முயற்சியில் ஓரளவே வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

படத்தில் நடித்த பிரபலங்கள் தொடங்கி, கெஸ்ட் ரோலில் வந்தவர்கள் வரை தங்களுடைய கேரக்டரை சரியாக செய்துள்ளார்கள். ஆனால் கதை சொல்லல் பிரமாண்டத்தில் மட்டுமல்லாது வசனங்கள் வழியாகவும் இருக்க வேண்டும். அதில் சற்று சறுக்கியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். பின்னணி இசையும், விஎஃப்எக்ஸ் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பக்தி மற்றும் பிரமாண்டத்தின் உச்சமாக எடுக்கப்பட்டுள்ள கண்ணப்பா படத்தை நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டரில் சென்று பார்க்கலாம்.