ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.. கடுப்பான பயணிகள்..

Air India Express: துபாயில் இருந்து ஜெய்பூருக்கு புறப்பட இருந்த ஏர் இந்திய விமானத்தில் சுமார் 5 மணி நேரம் ஏசி இல்லாமல் காக்கவைக்கப்பட்டதாகவும், பயணிகளுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை எனவும் பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.. கடுப்பான பயணிகள்..

ஏசி இல்லாமல் பயணிகள் தவிப்பு

Published: 

16 Jun 2025 19:33 PM

துபாய் விமான நிலையத்தில் கடும் வெப்பத்தின் மத்தியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சுமார் 5 மணி நேரம் ஏசி இல்லாமல் உட்கார வைக்கப்பட்டதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானம் துபாயிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. பயணிகள் பகிர்ந்து கொண்ட காட்சிகளில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் ஏசி இல்லாமல் கடும் வெப்பத்தில் வியர்த்து அசவுகரியமாக அமர்ந்திருப்பதை காண முடிந்தது. வெளிப்புற வெப்பநிலை கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் இருந்ததாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரவு 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக மறுநாள் அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டது.

ஏசி இல்லாததால் அவதியில் பயணிகள்:

சமீப காலமாக விமானங்களில் கோளாறுகள் ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்படுகிறது. அல்லது விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானத்தில் ஏசி வேலை பார்க்கவில்லை என பல சம்பவங்கள் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் பயனர்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் துபாயிலிருந்து ஜெயப்பூருக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் குளிர்சாதன கருவி வேலை செய்யவில்லை என அதில் இருந்த பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானத்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கண்டுகொள்ளாமல் இருந்த கேபின் க்ரூ:


சில முதியவர்கள் உடல்நல சில முதியவர்களின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் புகார் தெரிவித்தனர். அதேபோல் விமானத்தில் காக்க வைக்கப்பட்டவர்களுக்கு போதிய தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிர்வாகத்திடமிருந்தும் சிவல் விமான போக்குவரத்து இயக்குநரகமிடம் இருந்தும் இது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளனர். கடுமையான வான் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரங்களில் இருந்து விமானங்கள் தாமதமாக வந்ததாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வைரலான காணொளி குறித்த கருத்து தெரிவித்த செய்தி தொடர்பாளர், ஏசி சிஸ்டம் சாதாரணமாக தான் இயங்கியுள்ளது என்றும் இருப்பினும் விமானம் ஓடுதளத்தில் நிற்கும் பொழுது நீண்ட நேரம் கதவுகள் திறந்து இருந்தால் வெளியில இருக்கக்கூடிய வெப்பமானது உள்ளே ஏசியின் குளிர் தன்மையை பாதிக்கும் எனவும் கேபின் குழுவினர் நடைமுறையின் படி விமானம் புறப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் பயணிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அவர்கள் பணிவுடன் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் இந்த சம்பவத்திற்கு வருந்துகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.