சென்னை அருகே லாரி திருட்டு.. 10 கி.மீ தொங்கியபடி போலீஸ் சேஸிங்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

Chengalpattu Lorry Theft: செங்கல்பட்டு அருகே லாரி டிரைவர் டீ குடிக்கச் சென்ற சமயம், லாரி திருடப்பட்டது. டிரைவர் துரத்த, இருசக்கர வாகன ஓட்டிகள் உதவினார்கள். போக்குவரத்து காவலர் முருகன் லாரியில் தொங்கி, மற்ற காவலர்களுடன் சேர்ந்து லாரியை மடக்கினர். திருடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது. சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னை அருகே லாரி திருட்டு.. 10 கி.மீ தொங்கியபடி போலீஸ் சேஸிங்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

செங்கல்பட்டு லாரி சேஸிங்

Updated On: 

20 May 2025 18:17 PM

செங்கல்பட்டு, மே 20: சென்னையை அடுத்த செங்கல்பட்டு – விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு சுங்கச்சாவடி (Chengalpattu Toll Gate) அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு, அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவர் ஓரமாக நிறுத்திவைத்து டீ குடிப்பதற்காக அருகில் இருந்த டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அடையாள தெரியாத மர்மநபர் ஒருவர் லாரியின்  (Lorry Theft) உள்ளே ஏறி வண்டியை இயக்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னையை நோக்கி வேகமாக கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியின் பின்னாடி கத்திக்கொண்டே ஓடி சென்று பிடிக்க முயன்றுள்ளார். இதன்பிறகு, நடந்த சம்பவம்தான் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

என்ன நடந்தது..?

லாரி டிரைவர் பின்னாடியே துரத்தி ஓடியதை கண்டு, அங்கிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் அவரை பின்னாடி உட்காரவைத்து லாரியை துரத்தி கொண்டு சென்றுள்ளனர். அப்போது லாரியானது மகேந்திரா சிட்டி சிக்னலில் நின்றபோது அங்கு பணிடில் இருந்த போக்குவரத்து காவலர்களிடம் லாரி டிரைவர் தனது கனகர வாகனம் கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அப்போது, பணியில் இருந்து போக்குவரத்து காவலர் முருகன் லாரியின் பின்னாடி வேகமாக துரத்தி சென்று லாரியின் பக்கவாட்டு கம்பியை பிடித்துகொண்டு ஏறியுள்ளார்.

போலீஸை பார்த்து அதிர்ச்சியடைந்த லாரியை கடத்திய மர்மநபர் உடனடியாக, எங்கே சிக்கிக்கொள்வோமோ என்ற பயத்தில் நெடுஞ்சாலையில் வேகமாக இயக்க தொடங்கியுள்ளார். லாரியில் தொங்கியபடியே காவலர் முருகனும் முடிந்தவரை லாரியை நிறுத்த முயற்சி செய்தார். அதற்கு, மற்ற காவலர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் லாரிக்கு முன்னாடி முந்தி சென்று லாரியை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து லாரியை கடத்திய மர்மநபரை காவல் நிலையம் அழைத்து சென்று காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

காவலர் விளக்கம்:

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த காவலர் லோகேஷ் காந்தி கூறுகையில், “பரந்தூர் அருகே கனகர லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது, அந்த லாரி மீது ஏறிய திருடன் அதனை வேகமாக ஓட்ட தொடங்கினான். எங்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நாங்களும் சுமார் 10 கி.மீ லாரிக்கு பின்னால் துரத்தி சென்றோம். நாங்களும் எவ்வளவோ முறை சொன்னோம், வண்டியை நிறுத்துடா, வண்டியை நிறுத்தா என்று பின்னாடி கத்திக்கொண்டே வந்தோம். ஆனால், அவன் கேட்கவே இல்லை. இறுதியாக பேரிகார்டு, 4 சக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி லாரியை மடக்கி பிடித்தோம்.

இதனால், நல்லவேளையாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, பெரியளவிலான விபத்தும் தவிர்க்கப்பட்டது. லாரியை ஓடிசென்ற நபரை பிடித்து விசாரித்தபோது, அந்த நபர் மனநல பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.” என்று தெரிவித்தார்.