மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றொரு பக்கம்.. 6 இடத்தில் சதம் அடித்த வெயில்..
Weather Update Tamilnadu: தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி அனேக இடங்களில் நல்ல மழை பொழிவு இருந்தாலும் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபேரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜூன் 18, 2025: கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் ஏழு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரியில் கடந்த சில தினங்களாக அதிகப்படியான மழை பதிவாகி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் மரம் முறிந்து விழுந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் மழைப்பொழிவானது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 18 2025 தேதியான இன்று நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை ஜூன் 19 2025 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:
ஜூன் 17 2025 அன்று தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஜூன் 18 2025 மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அதே இடத்தில் நிலவுவதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஜார்கண்ட் வழியாக நகரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி:
அதேபோல், நேற்று அதாவது ஜூன் 17 2025 அன்று குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஜூன் 18 2025 மத்திய ராஜஸ்தான் பகுதியில் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை என்பது பொதுவாக இந்தியாவில் இருக்கக்கூடிய அனேக மாநிலங்களுக்கு மழை பொழிவை தரப்படும் அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு நல்ல மழை பொழிவை தரும்.
அதிகரிக்கும் வெப்பநிலை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/WQ7qQPoYTj
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 18, 2025
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடம் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் 37.6 டிகிரி செல்சியசும், தூத்துக்குடியில் 37.8 டிகிரி செல்சியசும், திருச்சியில் 37.3 டிகிரி செல்சியசும், கடலூரில் 38 டிகிரி செல்சியசும், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது