அடுத்த பூத் கமிட்டி மாநாடு.. வேலூரில் களமிறங்கும் விஜய்.. ரோடு ஷோ நடத்த திட்டம்!
TVK Booth committee Meeting : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட பூத் கமிட்டி மாநாடு வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை, மே 20 : தமிழக வெற்றிக் கழகத்தின் (tamizhaga vettri kazhagam) இரண்டாவது பூத் கமிட்டி மாநாடு (TVK Booth Committe Meeting) வேலூரில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, அவர் வேலூரில் ரோடு ஷோவுடம் நடத்த திட்டமிட்டுள்ளார். கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியை தொடங்கி வேகத்திலேயே பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்தார். கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கிடையில், கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தி வருகிறார்.
அடுத்த பூத் கமிட்டி மாநாடு
அண்மையில் கூட, விஜய் கோவையில் தனது முதற்கட்ட பூத் கமிட்டி மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்தினார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ரோடு ஷோவும் நடத்தினார். அதைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட்ட ரோடு ஷோ எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுவும் எப்போது நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது பூத் கமிட்டி மாநாடு வேலூரில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இரண்டாம் கட்ட பூத் கமிட்டி மாநாடு மதுரையில் நடத்தப்படலாம் என செய்திகள் வெளியானது.
ஆனால், விஜய் வேலூரில் 2வது மாநாட்டை நடத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இடம் தேர்வு செய்யும் இடம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு வரும்போது, விஜய் ரோடு ஷோவும் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வேலூரில் களமிறங்கும் விஜய்
வேலூரில் நடக்கும் மாநாட்டிற்கு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் நடக்கும் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் தமிழக வெற்றிக் கழக தலைமை திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிர நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. அண்மையில் கூட, பாஜக உடன் கூட்டணி இல்லை என தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மலா குமார் கூறியிருந்தார். அதாவது, திமுக கூட்டணியை வீழ்த்த விஜய், பாஜக அதிமுக கூட்டணியில் இணைவார் என தொடர் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. இந்த நிலையில், அதற்கு தவெக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.