வேலூரை தொடர்ந்து திருப்பத்தூரில் கள ஆய்வு.. நலத்திட்டங்களை வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதாவது ஜூன் 26 2025 தேதியான இன்று, திருப்பத்தூரில் கள ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அவர், 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட வழங்கி சிறப்புரையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூரில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக ஜூன் 25 2025 தேதியான நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து சாய் நகர் சீரடி விரைவு ரயில் மூலம் காட்பாடி வரை பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக வேலூர் சென்றடைந்தார். வேலூர் சென்றடைந்த முதலமைச்சர் ,மு.க ஸ்டாலினுக்கு வழி நெடுக்க மக்கள் திரளான வரவேற்பு அளித்தனர். வேலூரில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் 26 2025 தேதியான இன்று திருப்பத்தூரில் கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்:
வேலூர் பென்ட்லாண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூபாய் 150 கோடி மதிப்பில் ஏழு தளங்கள் கூடிய பன்நோக்கு அரசு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 766 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும் வழங்கினார். அதேபோல பன்னிரண்டாம் வகுப்பில் வேலூர் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்களை பெற்ற ஒன்பது மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
வாரியணைத்த வேலூர் – முதலமைச்சர் நெகிழ்ச்சி பதிவு:
வாரியணைத்த வேலூரும் திருப்பத்தூரும்🖤♥ pic.twitter.com/BT3Gvd79Af
— M.K.Stalin (@mkstalin) June 26, 2025
அரச நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வேலூர் செங்காநல்லூரில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கட்டமைக்கப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல அங்கிருந்த கலைஞரின் திருவுருவ சிலையையும் திறந்து வைத்தார். வேலூரில் நடைபெற்ற ரோட் ஷோவில் திரளான மக்கள் பங்கேற்று முதலமைச்சருக்கு பெரும் வரவேற்றை தந்தனர்.
திருப்பத்தூரில் கள ஆய்வு:
அதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 26, 2025 தேதியான இன்று இரண்டாவது நாளாக திருப்பத்தூரில் கள ஆய்வு மேற்கொள்கிறார். திருப்பத்தூரில் அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதே போல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருப்பத்தூரில் இருந்து பிற்பகல் 12:00 மணி அளவில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.