ஆளுநர் விவகாரம்.. கேள்வி கேட்ட ஜனாதிபதி முர்மு.. கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin condemns President Murmu : ஆளுநர் அதிகாரங்கள் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இது மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க பாஜக அல்லாத அனைத்த மாநில தலைவர்கள் சட்டப் பேராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்

முதல்வர் ஸ்டாலின் - குடியரசுத் தலைவர் முர்மு
சென்னை, மே 15 : ஆளுநர் அதிகாரங்கள் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். இந்த விஷயம் பரபரப்பை கிளப்பியதை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியரசுத் தலைவர் குறிப்பை வன்மையாக கண்டிக்கிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்துள்ளது. இதனை தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் குடியரசுத் தலைவர் குறிப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி முர்முவுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி தான் இது. சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளரான உச்ச நீதிமன்ற அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக உள்ளது.
ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபனை இருக்க வேண்டும்? மசோதா தாமதத்தை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்த முயற்சிக்கிறதா? பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?
நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
“மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்”
I strongly condemn the Union Government’s Presidential reference, which attempts to subvert the Constitutional position already settled by the Hon’ble Supreme Court in the Tamil Nadu Governor’s case and other precedents.
This attempt clearly exposes the fact that the Tamil Nadu…
— M.K.Stalin (@mkstalin) May 15, 2025
எனவே, இது மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பாஜக அல்லாத மாநில தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும். வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசேதாக்களுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, காலக்கெடுவை நிர்ணயித்தது. அதாவது, மசோத்தாக்களுக்கு ஒப்புதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் மூன்று மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடன் கருத்து கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.