களைகட்டும் ஊட்டி.. பூத்து குலுங்கும் 7 லட்சம் மலர்கள்.. கட்டணம் என்ன? முழு விவரம்
Ooty Flower Show 2025 : சுற்றுலா பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஊட்டி மலர் கண்காட்சி 2025 மே 15ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்ட நாளிலேயே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்துள்ளன. இந்த மலர் கண்காட்சி 2025 மே 25ஆம் தேதி வரை நடைபெறும். எனவே, இதற்கான டிக்கெட் விலை உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

நீலகிரி, மே 16 : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி (Ooty Flower Show) தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025 மே 15ஆம் தேதியான நேற்று தொடங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சி 2025 மே 25ஆம் தேதி வரை 11 நாட்களளுக்கு இருக்கும். நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுக்கு பெயர்போனது. குறிப்பாக, கோடை விடுமுறையில் நீலகரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும். அங்கு இருக்கும் இதமான காலநிலை, இயற்க்கை வளம், வனப்பகுதியை கண்டு ரசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஆண்டுதோறும், மே மாதத்தில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி மலர் கண்காட்சி
127வது மலர் கண்காட்சியை 2025 மே 15ஆம் தேதியான நேற்று முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சி 11 நாட்கள் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியில் 7 லட்சம் பூக்கள் இடம்பெற்றுள்ளன. வழக்கமாக ஐந்து நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, 2025ஆம் ஆண்டு 11 நாட்கள் நடைபெறுகிறது.
இதனால், பூந்தொட்டிகள், மலர் செடிகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் மற்றும் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 லட்சம் மலர்களால் செஸ், யானை உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
நுழைவுவாயிலில் 1.70 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், கண்ணாடி மாளிகை, கள்ளிச் செடி மாளிகை வைக்கப்பட்டு, அங்கு அரியவகை தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு சிறப்பம்சம் என்னவென்றால், ஜெர்மணியம், சைக்ளோபின், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் உள்பட 278 வகையான விதைகள், நாற்றுகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் செடி உற்பத்தி செய்யப்பட்டது.
கட்டண விவரம் இதோ
மேலும், 2 லட்சம் கார்னேசன் உட்பட பல்வேறு மலர்களால் ராஜராஜ சோழனின் அரண்மலை போல 35,000 சாமந்தி மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்லணை அணையின் அமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில், மலர் கண்காட்சியின் கட்டண விவரங்கள் போன்றவற்றை பார்ப்போம். ஊட்டி மலர் கண்காட்சி 2025 மே 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு இருக்கும்.
காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தினமும் நிகழ்ச்சிகளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடக்கும். டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை, தோட்டக்கலை துறையின் https://tnhorticulture.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையத்ளத்தில் மூலமும் டிக்கெட்டுகளை பெறலாம்.
அல்லது நேடியாகவும் டிக்கெட்டுகளை வாங்கலாம். கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், டிக்கெட் கவுண்டரில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆன்லைனில் டிக்கெட் எடுப்பது நல்லது. டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை, பெரியவர்களுக்கு ரூ.100, 5 முதல் 10 வயதுடைய சிறார்களுக்கு ரூ.50, போட்டோ கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100, முழு போட்டோ ஷூட் எடுப்பதற்கு ரூ.5,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். இதற்கேற்ப சுற்றுலா பயணிகள் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.