‘கருணாநிதிக்கு மெரினாவில் இடம் பிடித்துக்கொடுத்தவர் ராமதாஸ்’ – பாமக வழக்கறிஞர் பாலு
PMK Leader Balu's Controversial Claim : பாமக நிறுவனர் ராமதாஸ் மெரினாவில் இடம்பிடித்து கொடுத்துதான் கலைஞர் கருணாநிதி அங்கு அடக்கம் செய்யப்பட்டார் என்றும் அவர் அளித்த மஞ்சள் துண்டை தான் கருணாநிதி அணிந்திருந்தார் என்றும் பாமக வழக்கறிஞர் பாலு பேசியிருக்கிறார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமதாஸ் - வழக்கறிஞர் பாலு
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi) சார்பில் சித்திரை முழு நிலவு என்ற பெயரில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மே 11, 2025 அன்று மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு (Tamil Nadu)முழவதும இருந்து தொண்டர்கள் வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மாநாடு நடைபெறுவதால் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு திடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை கண்காணிக்க 1500 டிரோன்கள் விழா நடைபெறும் இடத்தில் பறக்கவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்வை பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) கொடியேற்றி தொடங்கி வைத்தார். பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களுக்காக விழாவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாமக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு ராமதாஸ் மற்றும் அண்புமணி ராமதாஸ் ஒரே மேடையில் தோன்றினர். விழாவில் காடுவெட்டி குரு, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறம் வன்னியர் சங்க கொடிகள் கட்டப்பட்டிருந்தன. விழாவில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் பிடித்துக்கொடுத்தவர் ராமதாஸ்’
இந்த நிகழ்வில் பேசிய பாமகவின் வழக்கறிஞர் பாலு, ”அண்ணாவின் ஆசைப்படி அவர் அருகிலேயே என்னை அடக்கம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அன்றைக்கு மருத்துவர் ராமதாஸ் இடம் பிடித்து கொடுத்துதான் இன்றைக்கு கலைஞர் கருணாநிதி மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது வரலாறு. கலைஞருக்கு இடம் பிடித்து கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி இந்த உழைக்கும் வர்க்கத்துக்கு இட ஒதுக்கீட்டை கேட்கின்ற பொழுது அதை கொடுக்க மறுக்கின்றார்.
மருத்துவர் ராமதாஸ் கலைஞர் கருணாநிதிக்கு போர்த்திய மஞ்சள் துண்டோடு தான் அவர் தமிழக அரசியலில் வலம் வர தொடங்கினார். அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பக் கூடிய கோரிக்கையை திரும்பி பார்க்காமல் இருந்து கொண்டிருக்கும் வேலையில் தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இன்றைக்கும் தமிழக அரசு இதை செய்யவில்லை. தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டால் மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு உரிய உள் ஒதுக்கீடை வழங்க முடியாது. மாநில அரசுக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது தற்கொலைக்கு சமமானது. இந்த சமூகம் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என்று சொன்னால் சமூக நீதி அடிப்படை கோட்பாட்டை மறந்துவிட்டதாக அர்த்தம். இந்த மாநிலத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்று சொன்னால் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும். அதை நடத்துகின்ற வரை நம்முடைய போராட்டம் ஓயாது” என்று பேசினார்.