Flag Pole Removal Order: கொடிக் கம்பம் நட்டால் கட்டணம் வசூல்.. தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!

Political Party Gatherings Fee: சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாமல் பொது இடங்களில் நிறுவப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கும், புதிய கொடிக்கம்பங்களுக்கும் கட்டணம் வசூலிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த உத்தரவை நிறைவேற்றாததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்து, கால அவகாசம் வழங்கியுள்ளார். அனுமதியின்றி நிறுவப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flag Pole Removal Order: கொடிக் கம்பம் நட்டால் கட்டணம் வசூல்.. தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!

சென்னை உயர்நீதிமன்றம் - கொடிக்கம்பம்

Published: 

18 Jun 2025 18:57 PM

சென்னை, ஜூன் 18: கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை முழுமையாக செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) தமிழ்நாடு அரசுக்கு (Tamil Nadu Govt) அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் புதிதாக கொடிக் கம்பம் வைக்க ஒவ்வொரு கம்பத்திற்கும் (Flag Poles) தலா ரூ.1000 கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட்டினால் அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சி கொடிக்கம்பம் நடுவது தொடர்பாக பல விஷயங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் உண்டாகும் என்றும், தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்றக் கூடிய வழக்கு 2025 ஜூலை 2ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்:

தமிழ்நாட்டில் முறையாக காவல்துறை அனுமதி இல்லாமல் சாலையோரங்களில் பல கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை எச்சரித்தது. இந்தநிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அதாவது 2025 ஜூன் 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பொது இடங்களில் நடப்படும் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களுக்கு மாதம் ஒரு முறை வாடகையாக ரூ. 1000 வசூல் செய்ய வேண்டும் என்றும், சாலைக்கு நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நட அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை:

அதை தொடர்ந்து, பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்கியது. கடந்த 2025 ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதற்கு நீதிபதி அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதிக்குள் உரிமை பெறாத கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டியது வரும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.