மதுரையில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்.. ஸ்டாலின் எடுத்த முடிவு!
DMK general committee meeting : மதுரை மாவட்டத்தில் 2025 ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அக்கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சென்னை, மே 03 : மதுரை மாவட்டத்தில் 2025 ஜூன் 1ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழக (திமுக) பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் நடத்தும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மதுரையில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்
இதனால், அனைத்து கட்சியின் தீவிர அரசியல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, அனைத்து கட்சிகளும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தி வருகிறது. அதோடு, மாவட்ட ரீதியாக கட்சியை பலப்படுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2025 மே 3ஆம் தேதியான இன்று திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அண்மையில் நீக்கப்பட்ட பொன்முடி கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும், அந்தந்த மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தேர்தல் பிரச்சாரம், மாவட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரைல் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் எடுத்த முடிவு
தொடர்ந்து, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் நடத்தும் பாஜக அரசுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் (மாவட்ட செயலாளர்கள்) இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான்.
அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் – மிரட்டல் – உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்” என்று அறிவுறுத்தினார். பாஜக அதிமுக கூட்டணி குறித்து விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், ”பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றார்.