Virat Kohli : சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகியது ஏன்? விராட் கோலியின் பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி
Virat Kohli About Retirement : கடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் தான் ஓய்வு பெற்றதற்கான காரணத்தை முதன் முறையாக அவர் பகிர்ந்துள்ளார். அவர் சொன்ன காரணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை (T20 World Cup) இந்தியா வென்ற பிறகு, விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோகித் சர்மா (Rohit Sharma) இருவரும் டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து கோலி 76 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சார்பில் கேப்டனாகவும் சரி, பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். களத்தில் இவரது ஆக்ரோஷமான செயல்பாடுகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. எந்த வித இக்கட்டான சூழ்நிலையையும் சிறப்பாக கையாளக் கூடியவர். ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
சர்வதேச டி20 போட்டியில் ஓய்வு பெற்றதற்கான காரணம்
இப்போது, RCB பாாட்காஸ்ட்டில் பேசிய கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, ”எனது வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் தானாக நடந்தது என நான் நினைக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வை அறிவித்தற்கு காரணம் நான் புதிய வீரர்களுக்காகத்தான். அவர்கள் தயாராக குறைந்தது 2 ஆண்டுகள் தேவை. பல்வேறு சூழ்நிலைகளில் விளையாட, அழுத்தங்களை சமாளிக்க, அனுபவம் பெற, உலகக் கோப்பைக்காக தயாராக என இந்த காலம் அவர்களுக்கு தேவை. அதனால் தான் ஓய்வை அறிவித்தேன்” என்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் விராட் கோலி, இன்னும் ஒரு ஐபிஎல் பட்டம் வெல்லாதது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்புதான் தனது உண்மையான வெற்றி. எனக்கு ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பை முன் எந்த ஒரு கோப்பையுடனும் ஒப்பிட முடியாது,” என அவர் உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
விராட் கோலிக்கு பிடித்த நீ சிங்கம் தான் பாடல்
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
மேலும் இந்த நிகழ்ச்சியில் அவரிடம் தனக்கு பிடித்த பாடல் எது என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கு, ‘நீ சிங்கம் தான்’ என்ற பாடல் பிடிக்கும் என்றார். அவருடன் கலந்துகொண்ட வீரர்கள் ஹிந்தி மற்றும் பஞ்சாப் பாடல்களை தெரிவித்த போது இவர் தமிழ் பாடல்களை கூறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்பு நடித்திருந்த பத்து தல படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை விராட் கோலியை வைத்து எடிட் செய்து பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை பதிர்ந்த நடிகர் சிம்பு, நீ சிங்கம் தான் என விராட் கோலியைக் குறிப்பிட்டது ஹைலைட்டாக அமைந்தது.
ஐபிஎல் 2025 சீசனில் தற்போது வரை 10 போட்டிகளில் 443 ரன்கள் எடுத்துள்ள கோலி, தனது அணியுடன் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு கடுமையாக போராடி வருகிறார்.