Vastu Tips: வீட்டில் கண்ணாடி வைக்க சிறந்த திசை எது? – வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
கண்ணாடிகள் அழகுக்காக மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனை சரியான இடத்தில் வைத்தால் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்; தவறான இடத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது. கண்ணாடியை கிழக்கு திசையில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வாஸ்துப்படி கண்ணாடி வைப்பது மகிழ்ச்சி மற்றும் செல்வ வளத்தைத் தரும் என சொல்லப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
கண்ணாடி (Mirror) என்பது அழகுக்காக மட்டுமல்லாமல் வாஸ்து சாஸ்திரத்திலும் (Vastu Shastra) மிக முக்கியமானதாக பயன்படுகிறது. அதனால் வீடு, அலுவலகம் தொடங்கி கோயில் வரை அனைத்து இடங்களிலும் கண்ணாடி மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இயற்கையாகவே கண்ணாடிகள் ஆற்றலை உறிஞ்சி பிரதிபலிக்கும் சக்தியைக் கொண்டுள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவை சரியான இடத்தில் இருந்தால் ஒரு இடத்தின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் செய்யும், தவறான இடத்தில் வைத்தால் எதிர்மறை பலன்களை கொடுக்கவும் செய்யும் என சொல்லப்படுகிறது. பலருக்கும் வீட்டில் கண்ணாடி எந்த திசையில் வைக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் என்பது இருக்காது. அது வாஸ்துவின் படி பல மாற்றங்களை உண்டாக்கும் என்பதால் இதுபற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.
படுக்கையறை
வீட்டில் எக்காரணம் கொண்டும் படுக்கைக்கு நேர் திசையிலோ அல்லது தூங்கும் நபரைப் பிரதிபலிக்கும் வகையிலோ கண்ணாடி இடம்பெறக் கூடாது. அந்த அறையின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவற்றில் இவற்றை மாட்டி வைக்க வேண்டும். தவறான இடத்தில் மாட்டுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சலையும் உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இரவில் பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் கண்ணாடியை ஏதேனும் துணி கொண்டு மூடி விடுவது நல்லது.
ஹால்
பொதுவாக ஒரு வீட்டின் ஹால் நன்றாக பரந்து விரிந்த இடமாக இருக்கும். இது பார்ப்பதற்கு விசாலமான உணர்வை உண்டாக்கும். அந்த இடம் மேலும் சிறப்பாக தெரிய கண்ணாடிகளைப் பயன்படுத்துவார்கள். வாஸ்துவின் படி கண்ணாடியானது வீட்டில் சாப்பாட்டு மேசை , பீரோ, பூஜையறையை குறிக்கும் இடத்தையோ நோக்கி இருப்பதை உறுதிப்படுத்தலாம். ஏனெனில் இது பிரதிபலிப்பு மூலம் செழிப்பு ஆற்றலை இரட்டிப்பாக்கும் தன்மை கொண்டது.
வீட்டு வாசல்
பொதுவாக பலரும் வீட்டின் வாசல் பகுதியில் கண்ணாடி வைத்திருப்பதை காணலாம். நீங்கள் எத்தகைய மனநிலையுடன் வீட்டிற்கு வந்தாலும் அந்த கண்ணாடியில் முகம் பார்க்கும் போது அதில் உணர்வுகள் வெளிப்பட்டு விடும். இதனால் கோபம், சோகம், துன்பம், எரிச்சல் உள்ளிட்ட பல உணர்வுகள் காணாமல் போகும் என்பது நம்பிக்கையாகும். அது மட்டுமல்லாமல் நிலை வாசலில் கண்ணாடி வைப்பது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இது எதிர்மறை ஆற்றலை விரட்டி வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. சிலர் பூஜை அறையில் கண்ணாடி வைத்திருப்பார்கள். இதுவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. மேலும் வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
கண்ணாடியை கிழக்கு திசையில் வைக்கும் போது அது காலை நேரத்தில் சூரிய ஆற்றலை உறிஞ்சி நேர்மறை சக்திகளை வீட்டில் பரவ செய்யும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் படிக்கட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் கண்ணாடி வைப்பது தவறான காரியமாகும். இது வீட்டில் அமைதிக்கு வழிவகுக்கும். நீங்கள் இடத்தை மாற்றினாலும் வாஸ்து திசைக்கு ஏற்ப கண்ணாடி வைக்காவிட்டால் எதிர்மறையான நிகழ்வுகள் உண்டாக்கலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கண்ணாடி மட்டுமல்ல எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதனை வாஸ்து படி பின்பற்றினால் மகிழ்ச்சியும் செல்வ வளமும் பெற்று வாழலாம் என சாஸ்திரம் சொல்கிறது.
(வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)