Guru Peyarchi 2025: கொஞ்சம் கவனம் அவசியம்.. மீன ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்!
குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மே 11, 2025 அன்று பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் குறையும். இருப்பினும், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தொழில் ரீதியாக அக்டோபர் வரை வளர்ச்சி மெதுவாக இருக்கும். குடும்ப உறவுகளில் அமைதியைக் காப்பது அவசியமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மே 11, 2025 அன்று பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக மீன ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பது பற்றி காணலாம். அதன்படி ஏழரை சனியின் முதல் பகுதியில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அர்த்தாஷ்டக ராசிக்கு மாறுவதால் பெரிய அளவில் நன்மைகள் இருக்காது. அதேசமயம் கும்ப ராசியில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு பல பிரச்சினைகளை கொடுத்து வரும் சனி பகவானையும் ராகுவையும் குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் பார்ப்பதால் பிரச்சனைகள் குறையும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் தீர்வு காண்பீர்கள். குருபகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்ப்பது அனைத்து தோஷங்களையும் போக்கும் சக்தியை கொண்டதாகும். சில நேரங்களில் எதிர்பாராத செலவுகளால் பிரச்சனைகள் உண்டாகலாம்.
அலுவலக விஷயத்தில் கவனம் தேவை
ஏழரை சனியின் ஆரம்ப பகுதியில் இருக்கும் உங்களுக்கு சனியுடன் ராகு சேரும் சேர்க்கை வேலை சுமையையும் பொறுப்புகளையும் அதிகரிக்கும். நிர்வாகத்தின் மீது கருத்து வேற்றுமை உண்டாகும். சில நேரங்களில் மனக்கசப்புக்கும் வாய்ப்புள்ளது. அலுவலக பொறுப்புகள் சம்பந்தமாக வெளியூர்களுக்கு செல்லும்போது கவனமாக சென்று வாருங்கள். மேலும் விரைய ஸ்தானத்தில் ஏழரை சனியுடன் ராகுவும் இணைந்து இருப்பதால் அக்டோபர் மாதம் வரை தொழிலில் பெரிய அளவுக்கு வளர்ச்சி இருக்காது. சில நேரங்களில் எதிர்பாராத நஷ்டம் உண்டாக்கலாம். எனவே தொழில் சம்பந்தப்பட்ட எதையும் அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
அதே சமயம் தேவைப்படும் பணத்தை கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தமிழ் புத்தாண்டு முழுவதும் சுக்கிரன் கலைத்துறையை தனது அதிகாரத்தில் கொண்டுள்ளான். அதனால் எதையும் முன்கூட்டியே ஆராய்ந்து திட்டமிட்டு செய்வது நல்லது. வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
அரசியல் துறைக்கு செவ்வாய் சனி சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் அனுகூலமாக இல்லை என்பதால் அக்டோபர் மாதம் வரை பொறுமை காக்க வேண்டும். பேச்சுகளில் நிதானம் இருக்க வேண்டும்.
நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்
மாணவ மாணவியர்களுக்கு குரு பெயர்ச்சி காலம் கல்வியில் சீரான முன்னேற்றம் இருக்கும். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். விரும்பிய உயர்கல்வியை தேர்வு செய்வீர்கள். அனைத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். விவசாயத் துறையினருக்கு இந்த காலகட்டம் கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும். பயிர்கள் செழித்து வளரும். விளைச்சல் மற்றும் விற்பனை மனதில் நிம்மதியை அளிக்கும். தசா புக்திகள் சுப பலம் பெற்றிருப்பது புதிய விலை நிலம் வாங்கும் யோகத்தையும் அளிக்கும்.
பெண்களைப் பொறுத்தவரை இந்த ராசியினர் ஏழரைச் சனி மற்றும் விரைய ஸ்தானத்தில் ராகுவின் பிடியில் அகப்பட்டு இருப்பதால் பெரிய அளவில் நன்மைகள் இருக்காது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. எக்காரணம் கொண்டும் ஆடம்பர செலவுகளை செய்யாதீர்கள்.
மீன ராசிக்காரர்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதையும் வாகனம் ஓட்டத்தையும் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம் என்பதால் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சிறு உடல் உபாதை ஆனாலும் உடனடியாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும். நீங்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் வீட்டின் பூஜையறை அல்லது அருகில் உள்ள கோயில் ஒன்றில் மாலை நேரத்தில் தவறாமல் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனாக பார்க்கப்படுகிறது.
(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த தகவலானது கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)