Adi Kailash Yatra Blocked: ஆதி கைலாஷ் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு.. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித்தவிப்பு!

Uttarakhand Landslide: உத்தரகாண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிக்கித் தவிக்கின்றனர். எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் உள்ளூர் நிர்வாகம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. யாத்திரை பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Adi Kailash Yatra Blocked: ஆதி கைலாஷ் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு.. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித்தவிப்பு!

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு

Published: 

20 May 2025 17:34 PM

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் ஐலாகட் அருகே இன்று அதாவது 2025 மே 20ம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக, ஆதி கைலாஷ் யாத்திரை பாதை முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, இருபுறமும் 100க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் செல்லவும் முடியாமல், வரவும் முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். தகவல் கிடைத்தவுடன், நிவாரண மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, எல்லை சாலைகள் அமைப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து நிலச்சரிவுகளால் குவிந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி சாலைகளை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்:

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் ஏற்பட்டுள்ள இடிபாடுகளை அகற்ற ஜேசிபியின் உதவியையும் அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர, ஏராளமான உள்ளூர் வாசிகளும் உதவி செய்ய சம்பவ இடத்தில் உள்ளனர். சம்பவம் குறித்த் தகவல் கிடைத்தவுடன், எல்லை சாலை அமைப்பின் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் உள்ள மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, எல்லை சாலைகள் அமைப்பு குழு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ”சிக்கலில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக, சாலையை விரைவில் சுத்தம் செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.” என்று தெரிவித்தார்.

உள்ளூர் நிர்வாகம் இது தொடர்பாக தெரிவிக்கையில், “ நிவாரண நடவடிக்கைகளில் எல்லை சாலைகள் அமைப்பு குழுவுக்கு நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முழுமையாக உதவி வருகிறோம். சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.

ஆதி கைலாஷ் யாத்திரையின் முக்கியத்துவம்:

உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள ஆதி கைலாஷ் யாத்திரை இந்து மதத்தில் மிகவும் புனிதமான பயணமாக கருதப்படுகிறது. பஞ்ச கைலாயங்களில் 2வது புனிதமான இடமாக ஆதி கைலாயம் கருதப்படுகிறது. பெரும்பாலான பயணப் பாதைகள் வாகனங்கள் மூலம் செல்லலாம். ஆனால், ஒரு சில பகுதிகளுக்கு கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த யாத்திரை கடல் மட்டத்திலிருந்து 5,945 மீ உயரத்தில் அமைந்துள்ளது. மழைக்காலஙக்ளில் இந்த பகுதி பெரும்பாலும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு, பயணப் பாதை தடைப்படும். இந்த முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025 ஜூன் 30ம் தேதி தொடங்கி 2025 ஆகஸ்ட் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையில் மொத்தம் 250 பக்தர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். கொரோனா பரவல் மற்றும் இந்தியா – சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 2020ம் ஆண்டொல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.