ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டும் – ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை வரைவு..

G7 Summit: கனடாவில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் ஈரான் இஸ்ரேல் மோதலை தணிக்க கூட்டு அறிக்கை வரைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த வரைவில் கையெழுத்து இடவில்லை என ராய்ட்டர்ஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டும் - ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை வரைவு..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Jun 2025 07:41 AM

ஜி-7 மாநாடு: ஈரான் மற்றும் இஸ்ரேல் (Iran Israel Conflict) ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதில் தாக்குதல் அளிக்கும் வகையில் ஈரானும் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க கனடாவில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் இது தொடர்பாக கூட்டு அறிக்கை வரைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டு அறிக்கையில் மத்திய கிழக்கில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவர ஜி 7 நாடுகள் தலைவர்கள் உறுதி கொண்டு உள்ளோம் அதே சமயம் இஸ்ரேல் பாதுகாப்புக்கு தாங்கள் ஆதரவாளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி 7 அமைப்பு:

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதுதான் ஜி 7 என்ற அமைப்பு. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜி 7 உச்சி மாநாடு கனடாவில் இருக்கும் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள கனடா பயணம் மேற்கொண்டார். இந்த ஜி 7 உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிலும் மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஒரு கூட்டறிக்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரெல் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்:


அந்த கூட்டு அறிக்கை வரைவில், மத்திய கிழக்கில் அமைதியும் நிலைத்தன்மையையும் நிலவ ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உறுதி கொண்டு உள்ளோம் எனவும் இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ” அதேசமயம் பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால் காசா உள்ளிட்ட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும். இந்த தாக்குதலின் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருளின் சந்தையில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்ட அறிக்கையில் கையெழுத்திட மறுத்த அமெரிக்க அதிபர்:

ஜி 7 உச்சி மாநாட்டில் ஈரான் இஸ்ரேல் மோதலை தணிக்க கூட்டு அறிக்கை வரைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த வரைவில் கையெழுத்து இடவில்லை என ராய்ட்டர்ஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. எரிசக்தி சந்தைகள் உட்பட ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கு இந்த வரைவு பயனளிப்பதாக இருக்கும். மேலும் இந்த வரைவில் இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெஹரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை குறிப்பிட்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் இருவரும் பேச வேண்டும் உடனடியாக பேச வேண்டும் என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்