பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண குழு.. திருமாவளவன் விமர்சனம்!

VCK Leader Thirumavalavan Criticised BJP | பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வரும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை குறித்து உலக நாடுகளுக்கு தெரிய படுத்தும் வகையில் 40 எம்பிக்கள் அடங்கிய குழுக்களை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இந்த குழுக்கள் உலக நாடுகளுக்கு சென்று பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து எடுத்துரைக்க உள்ளன.

பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண குழு.. திருமாவளவன் விமர்சனம்!

கோப்பு புகைப்படம்

Published: 

19 May 2025 06:50 AM

சென்னை, மே 19 : பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூது குழுக்களை மத்திய பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) அமைத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK – Viduthalai Chiruthaigal Katchi) தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசு எம்பிக்கள் குழுவை அமைத்துள்ள நிலையில், அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் எம்பிக்கள் குழு குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நல்லெண்ண தூது குழுக்களை அமைத்த மத்திய அரசு

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் எம்பிக்கள் அடங்கிய குழுக்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மொத்தம் 40 எம்பிக்கள் அடங்கிய 5-க்கும் மேற்பட்ட குழுக்கள் மொத்தம் 10 நாட்களில் உலக நாடுகளுக்கு சென்று பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து எடுத்துறைக்க உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் உள்ளிட்ட சில முக்கிய எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

நல்லெண்ண தூது குழுக்கள் – திருமாவளவன் விமர்சனம்

மத்திய அரசு உருவாக்கியுள்ள ஏழு குழுக்களில் இரண்டு குழுக்களை பாஜகவினரும், அடுத்த இரண்டு குழுக்களை அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா  ஆகிய கட்சிகளைச் சார்ந்தவர்களும் தலைமையேற்று வழிநடத்துவர். அத்துடன், பிற மூன்று குழுக்களை, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையேற்று வழிநடத்தவுள்ளனர் என மத்திய அரசின் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்துவது, பிறகு அதே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை நல்லெண்ணத் தூதுவர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்கிற பாஜக அரசின் அணுகுமுறையானது முரண்பாடாகவுள்ளது. இதன்மூலம் பாஜகவின் நாடக அரசியல் அம்பலப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூது குழுக்களை மத்திய பாரதிய ஜனதா கட்சி அமைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.