ஜூன் 4- வரை காத்திருக்க வேண்டாம்… மே 29- முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்…
Women's Empowerment Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.14 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். ஆனால், 1.12 கோடி தகுதியுள்ள பெண்கள் இன்னும் இத்திட்டத்தில் இணையவில்லை. அவர்களுக்காக 2025 மே 29 முதல் புதிய விண்ணப்ப வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு புதிய விண்ணப்பப் படிவங்களை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மே 29- முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மே 22: தமிழகத்தில் (Tamilnadu) கடந்த 2023 செப்டம்பர் 15ல் தொடங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் (Kalaingar Magalir Urimai Thogai) கீழ், தற்போது 1.14 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள 2.26 கோடி குடும்ப அட்டைகளில், 1.12 கோடி தகுதியுள்ள பெண்கள் இன்னும் திட்டத்தில் சேரவில்லை. இதைத் தீர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். வரும் 2025 மே 29 முதல் தவறிய பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். புதிய விண்ணப்பப் படிவங்கள் வழங்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டம், தமிழக மகளிருக்குள் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் அளவு உதவித் தொகை, ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்பத்தலைவி பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. இதன் பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 1.14 கோடியைக் கடந்துள்ளது.
1.12 கோடி பெண்கள் உதவித் தொகையை இன்னும் பெறவில்லை
தற்போதைய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் உள்ள 2.26 கோடி குடும்ப அட்டைகளில், 1.12 கோடி தகுதியுள்ள பெண்கள் இந்த உதவித் தொகையை இன்னும் பெறவில்லை. இது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்து, உரிமை தவறிய பெண்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன்கள் விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
புதிய விண்ணப்ப வாய்ப்பு – அரசின் திட்டம்
இந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், வரும் 2025 மே 29ஆம் தேதியிலிருந்து, உரிமைத்தொகை பெற தவறிய பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கக்கூடிய வகையில் அரசால் புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தவறிய மகளிருக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இந்த புதிய அறிவிப்பு அமைந்துள்ள நிலையில், தகுதியுள்ள அனைவரும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து திட்டத்தின் பயனை பெற அரசு வலியுறுத்துகிறது.
மகளிர் கோரிக்கைகள் – அரசின் பதில்
தவறவிடப்பட்ட பல பெண்கள், தங்களும் இந்த நலத்திட்டத்தில் சேர வேண்டும் என தொடர்ந்து அரசு மன்றங்களில் கோரிக்கை வைத்திருந்தனர். 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இனி ஒருபோதும் யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் ஊழியர்களின் சவால்
முன்னிலை விண்ணப்ப நடவடிக்கையின் போது, ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கியிருந்தனர். இருந்தாலும், ஒரு ரேஷன் கடையில் 1,000 ரேஷன் கார்டுகள் இருந்தால், அதில் பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டுமே உதவித் தொகை கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், பல இடங்களில் பொதுமக்கள் ரேஷன் ஊழியர்களிடம் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்தனர்.